சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி நிறுவனத்தில் பாடத்திட்டம் மாற்றம்


சென்னை பல்கலைக்கழகத்தின்  தொலைதூர கல்வி நிறுவனத்தில் பாடத்திட்டம் மாற்றம்
x
தினத்தந்தி 10 May 2018 11:00 PM GMT (Updated: 10 May 2018 9:21 PM GMT)

சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி நிறுவனத்தில் பாடத்திட்டம் மாற்றப்பட உள்ளதாக துணை வேந்தர் பி.துரைசாமி தெரிவித்தார்.

சென்னை,

சென்னை பல்கலைக்கழகத்தில் முதுநிலை படிக்கும் மாணவர்களுக்கும், பல்கலைக்கழக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை படிக்கும் மாணவர்களுக்கும் படிக்கும் காலத்திலேயே வேலை கிடைத்துவிட்டால் அவர்கள் விருப்பப்படி வேலையில் சேரலாம். அப்படி வேலையில் சேரும் மாணவர்கள் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி நிறுவனத்தில் படிப்பை தொடரலாம்.

அதே போல் தொலைதூர கல்வி நிறுவனத்தில் படித்து வரும் மாணவர்கள், அவர்கள் விரும்பும் பட்சத்தில் சென்னை பல்கலைக்கழகத்திலோ அல்லது பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளிலோ சேர்ந்து படிப்பை தொடராலாம்.

பாடத்திட்டம் மாற்றம்

ஏனெனில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் சேர்ந்து பயிலும் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்படும் பாடத்திட்டமே தொலை தூர கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

தொலைதூர கல்வி நிறுவனத்தின் பாடத்திட்டம் மாற்றப்பட்டு 2018-2019-ம் கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும்.

தொலைதூர கல்வி நிறுவனத்தில் பேராசிரியர் பாடம் நடத்துவதை வீடியோவாக பதிவு செய்து, தொலைதூர கல்வி நிறுவன இணையதளத்தில் சேமித்து வைக்கப்படும்.

தொலைதூர கல்வி நிறுவன மாணவர்கள் கட்டணம் செலுத்திய பிறகு தங்களுக்கு வழங்கப்படும் ரகசிய கடவுசொல்லை பயன்படுத்தி தொலைதூர கல்வி நிறுவன இணையதளத்தில் அந்த வீடியோவை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

3 பல்கலைக்கழகங்கள்

பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிமுறைப்படி சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம் ஆகியவைதான் தொலைதூர கல்வி நிறுவனத்தில் 2018-2019-ம் கல்வி ஆண்டில் மாணவர்களை சேர்க்க முடியும். கல்வியை தரமாக வழங்க பல்கலைக்கழக மானியக்குழு திட்டமிட்டுள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்தில் ஆன்லைனில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகள் படிப்பதற்கான வசதிகள் கொண்டுவர ஏற்பாடுகள் நடக்கிறது. பல்கலைக்கழக மானியக்குழுவின் அனுமதி கிடைத்த பிறகு இது செயல்படுத்தப்படும்.

இவ்வாறு துணைவேந்தர் பி.துரைசாமி தெரிவித்தார். 

Next Story