வேலை செய்துள்ளோம்: கூலி தாருங்கள் வாக்காளர்களுக்கு சித்தராமையா வேண்டுகோள்


வேலை செய்துள்ளோம்: கூலி தாருங்கள் வாக்காளர்களுக்கு சித்தராமையா வேண்டுகோள்
x
தினத்தந்தி 10 May 2018 10:45 PM GMT (Updated: 10 May 2018 9:24 PM GMT)

வேலை செய்துள்ளோம், கூலி தாருங்கள் என்று வாக்காளர்களுக்கு சித்தராமையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெங்களூரு, 

வேலை செய்துள்ளோம், கூலி தாருங்கள் என்று வாக்காளர்களுக்கு சித்தராமையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி முதல்-மந்திரி சித்தராமையா நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் கூறி இருப்பதாவது:-

மன்னித்துவிடுங்கள்

வாக்காளர்களே உங்கள் ஒவ்வொருவரின் வீட்டுக்கும் வந்து பேச முடியவில்லை. இதற்காக என்னை மன்னித்துவிடுங்கள். நாங்கள் கடந்த 5 ஆண்டுகளில் சிறப்பான முறையில் ஆட்சியை நடத்தி இருக்கிறோம். பொய் சொல்லி திசை திருப்பும் செயலை நாங்கள் செய்யவில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம். 40 ஆண்டுகளுக்கு பிறகு கர்நாடகத்தில் எனது தலைமையில் 5 ஆண்டுகள் ஆட்சி காலத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளோம். மதவாதம் என்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது மட்டுமின்றி, அது வளர்ச்சிக்கும் விரோதமானது. சரியாக பணியாற்றாத கட்சிகளின் தலைவர்கள், மதவாத உணர்வுகளை தூண்டிவிட்டு அதன் மூலம் ஆதரவு பெற முயற்சி செய்கிறார்கள். நான் சொன்னபடி நடந்து கொண்டேன்.

நேர்மையாக ஆட்சி

30-க்கும் மேற்பட்ட திட்டங்களை அமல்படுத்தி இருக்கிறோம். மாநிலத்தில் உள்ள கடைக்கோடி மனிதனுக்கும் உணவு, சுகாதாரம், கல்வி, வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். அந்த பணியை நாங்கள் செய்துள்ளோம். பாரபட்சமற்ற முறையில் நேர்மையாக ஆட்சி நிர்வாகத்தை நடத்தி இருக்கிறோம்.

இந்திரா உணவகம், மின்னணு விவசாய சந்தை, இலவச ரத்த சுத்திகரிப்பு மையங்கள், அன்ன பாக்ய உள்பட பல்வேறு திட்டங்களை அமல்படுத்தினோம். நாங்கள் சொன்னபடி வேலை செய்துள்ளோம். எங்களுக்கு கூலி தாருங்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story