பிரசாரத்தின் போது மாட்டுவண்டியில் இருந்து தவறி விழுந்து காங்கிரஸ் பிரமுகர் சாவு ராகுல்காந்தி ஆறுதல்


பிரசாரத்தின் போது மாட்டுவண்டியில் இருந்து தவறி விழுந்து காங்கிரஸ் பிரமுகர் சாவு ராகுல்காந்தி ஆறுதல்
x
தினத்தந்தி 10 May 2018 9:35 PM GMT (Updated: 10 May 2018 9:35 PM GMT)

பிரசாரத்தின்போது மாட்டு வண்டியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த காங்கிரஸ் பிரமுகரின் வீட்டுக்கு நேரில் சென்று ராகுல்காந்தி ஆறுதல் கூறினார்.

உப்பள்ளி, 

பிரசாரத்தின்போது மாட்டு வண்டியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த காங்கிரஸ் பிரமுகரின் வீட்டுக்கு நேரில் சென்று ராகுல்காந்தி ஆறுதல் கூறினார்.

காங்கிரஸ் பிரமுகர்

தார்வார் மாவட்டம் நவலகுந்து தாலுகா அள்ளிகேரி கிராமத்தை சேர்ந்தவர் எச்.வி.மாடள்ளி(வயது 72). காங்கிரஸ் பிரமுகரான இவர் ஹெஸ்காம் மின்வாரியத்தில் என்ஜினீயராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இந்த நிலையில், கர்நாடக சட்டசபை தேர்தலில் நவலகுந்து தொகுதியில் போட்டியிடும் வினோத் கே.அசோத்தி கடந்த 8-ந்தேதி அலவடி கிராமத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார்.

அந்த பிரசாரத்தில் மாடள்ளியும் கலந்து கொண்டு பொதுமக்களிடம் காங்கிரசுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது, காங்கிரஸ் பிரமுகர்கள் மாட்டு வண்டியில் ஊர்வலமாக சென்று பிரசாரம் செய்தனர். அந்த சந்தர்ப்பத்தில் மாட்டு வண்டியின் மீது நின்று கொண்டிருந்த மாடள்ளி திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

ராகுல்காந்தி நேரில் சென்று...

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, உப்பள்ளி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் மாடள்ளி பரிதாபமாக உயிரிழந்தார்.

பிரசாரத்தின்போது மாட்டு வண்டியில் இருந்து தவறி விழுந்து காங்கிரஸ் பிரமுகர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி காங்கிரஸ் தொண்டர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல்காந்தி, நேற்று மதியம் அள்ளிகெரே கிராமத்தில் உள்ள மாடள்ளியின் வீட்டுக்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

Next Story