ஆவடியில் கோழி வாங்குவதில் தகராறு: தி.மு.க.-பா.ம.க. நிர்வாகிகளுக்கு கத்திக்குத்து பெண் உள்பட 4 பேர் கைது


ஆவடியில் கோழி வாங்குவதில் தகராறு: தி.மு.க.-பா.ம.க. நிர்வாகிகளுக்கு கத்திக்குத்து பெண் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 10 May 2018 9:47 PM GMT (Updated: 10 May 2018 9:47 PM GMT)

ஆவடியில் கோழி வாங்குவதில் இருதரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் தி.மு.க. மற்றும் பா.ம.க கட்சி நிர்வாகிகளுக்கு கத்திக்குத்து விழுந்தது.

ஆவடி, 

திருமுல்லைவாயல் சோழன் நகரை சேர்ந்தவர் மோகன் (வயது 24). இவர் தனது நண்பருடன் நேற்று முன்தினம் மதியம் மரணம் அடைந்த உறவினர் ஒருவரின் இறுதிச்சடங்கிற்கு கோழி வாங்குவதற்காக ஆவடி புதிய ராணுவ சாலையில் உள்ள முகமது அனிபா மனைவி ஜெயலானி (36) என்பவரின் கடைக்கு வந்தார்.

அப்போது அவர் உயிருடன் நாட்டுக்கோழி வேண்டும் என கேட்டார். ஜெயலானி ஒரு கோழி ரூ.570 என கூறினார். பின்னர் ஒரு கோழி ரூ.550 என பேசி முடித்தனர்.

பின்னர் மோகன் ரூ.2 ஆயிரத்தை கொடுத்து கோழிக்கு ரூ.500 எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறினார். ஆனால் ஜெயலானி அந்த விலைக்கு தர முடியாது என்று கூறிவிட்டு கோழியை கொடுத்து விட்டு செல்லுங்கள் என்று கூறினார்.

இதையடுத்து மோகனும் அவரது நண்பரும் ஜெயலானியிடம் தகராறு செய்து விட்டு அங்கிருந்து சென்றனர்.

2 பேருக்கு கத்திக்குத்து

சிறிது நேரம் கழித்து மோகன் அவரது நண்பர்களான தி.மு.க. 12-வது இளைஞர் அணி செயலாளரான பிரபுவேல் (22), பா.ம.க. ஆவடி நகர செயலாளரான கவுரிவேல் (29) உள்பட 7 பேர் காரில் மீண்டும் ஜெயலானி கோழிக்கடைக்கு வந்து அவரிடம் தகராறு செய்தனர்.

அப்போது அவர்கள் ஜெயலானியின் சுடிதாரை பிடித்து கிழித்து விட்டு கடையில் இருந்த தராசை தூக்கி வீசியதாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரம் அடைந்த ஜெயலானி மற்றும் அவரது கடையில் இருந்தவர்கள் அவர்களுடன் மோதினர். அப்போது அவர்கள் தி.மு.க. நிர்வாகியான பிரபுவேல், பா.ம.க. நிர்வாகியான கவுரிவேல் ஆகியோரை கத்தியால் குத்தியதாக தெரிகிறது. பின்னர் அவர்கள் வந்த கார் கண்ணாடியையும் அடித்து நொறுக்கினர்.

இதையடுத்து படுகாயமடைந்த 2 பேரும் அயனம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

பெண் உள்பட 4 பேர் கைது

இதுகுறித்து மோகன் கொடுத்த புகாரில் ஜெயலானி அவரது கடையில் வேலை பார்த்த அசோக் (30), பிலால் (23) ஆகிய 3 பேரையும் ஆவடி போலீசார் கைது செய்து பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர் படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.

அதேபோல் ஜெயலானி கொடுத்த புகாரின் பேரில் மோகனை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். 

Next Story