சேதம் அடைந்த சிற்றபாக்கம் தடுப்பணையை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை


சேதம் அடைந்த சிற்றபாக்கம் தடுப்பணையை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 10 May 2018 9:51 PM GMT (Updated: 10 May 2018 9:51 PM GMT)

ஊத்துக்கோட்டை அருகே சேதம் அடைந்த சிற்றபாக்கம் தடுப்பணையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊத்துக்கோட்டை,

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பிச்சாட்டூரில் ஆரணியாறு அணை உள்ளது. இந்த அணை முழுவதுமாக நிரம்பினால் உபரி நீரை ஆரணி ஆற்றில் திறந்து விடுவது வழக்கம். இப்படி திறந்து விடும் தண்ணீர் சுருட்டப்பள்ளி, ஊத்துக்கோட்டை, சிற்றபாக்கம், பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி வழியாக பாய்ந்து பழவேற்காடு பகுதியில் வங்க கடலில் கலக்கிறது. இப்படி வீணாக தண்ணீர் கடலில் கலப்பதை தடுத்து விவசாயிகள் பயன் பெறும் விதத்தில் தமிழக அரசு ஊத்துக்கோட்டை அருகே உள்ள சிற்றபாக்கம் பகுதியில் 1983-ம் ஆண்டு ஆரணி ஆற்றின் குறுக்கே 480 மீட்டர் தூரத்துக்கு தடுப்பணை கட்டியது.

10 அடி உயரம் கொண்ட இந்த அணையில் சேமித்து வைக்கும் தண்ணீரை தேவைப்படும் போது கிருஷ்ணா நதி கால்வாய் மூலம் பூண்டி ஏரிக்கு திறந்து விடுவது வழக்கம். வெள்ளம் ஏற்பட்டால் உபரி நீர் ஆரணி ஆற்றில் பாயும். இப்படி உபரி நீர் தானாக ஆற்றில் பாய்வதால் தடுப்பணைக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க 480 மீட்டர் தூரத்துக்கு கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டது.

சேதம் அடைந்தது

2015-ம் ஆண்டு பெய்த பலத்த மழைக்கு ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் தடுப்பை-ணையை ஒட்டி அமைக்கப்பட்ட கான்கிரீட் தளம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் தடுப்பணைக்கு ஆபத்து ஏற்பட்டதால் 2016-ம் ஆண்டு ரூ. 1 கோடி செலவில் பெரிய பெரிய பாறாங்கற்களை கொண்டு கான்கிரீட் தளம் சீரமைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெய்த பலத்த மழைக்கு ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தடுப்பணை முழுவதுமாக நிரம்பியது. இதனால் உபரி நீர் ஆரணி ஆற்றில் பாய்ந்தது. தண்ணீர் கரை புரண்டு ஓடியதால் தடுப்பணையை ஒட்டினாற்போன்று இருந்த கான்கிரீட் தளம் மீண்டும் சேதம் அடைந்தது. இன்னும் சீரமைக்கப்படவில்லை.

பொதுமக்கள் கோரிக்கை

கோடை வெயில் காரணமாக தடுப்பணை தற்போது வறண்டு காணப்படுகிறது. இது போன்ற சந்தர்ப்பங்களில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டால் கான்கிரீட் தளம் நன்கு காய்ந்து உறுதி அடையும். இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு சேதம் அடைந்த தடுப்பணையை சீரமைக்க நிதி ஒதுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story