குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 11 May 2018 4:59 AM GMT (Updated: 11 May 2018 4:59 AM GMT)

குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று மதியம் 1 மணியளவில் விழுப்புரம் சாலாமேடு சின்னப்பா நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர்.

இவர்கள் அனைவரும் திடீரென கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்களில் குறிப்பிட்ட சிலரை மாவட்ட கலெக்டரிடம் அழைத்துச் சென்றனர்.

அப்போது அவர்கள் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியனிடம் கூறுகையில், நாங்கள் 110 குடும்பத்தினர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சின்னப்பா நகரில் கூரை மற்றும் குடிசை வீடுகள் கட்டி வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, சாலை வசதி, மின் இணைப்பு, தெருவிளக்கு, கழிப்பிட வசதி உள்ளிட்ட அனைத்தும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வீட்டு வரியையும் முறையாக செலுத்தி வருகிறோம்.

இந்நிலையில் ஏரி நீர்நிலை புறம்போக்கு இடத்தில் நாங்கள் வசித்து வருவதாக கூறி எங்கள் குடியிருப்புகளை அகற்ற பொதுப்பணித்துறையினர் முடிவு செய்துள்ளனர். அதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு வருவாய்த் துறையினர் மூலம் அளவீடும் செய்துள்ளனர். நாங்கள் குடியிருக்கும் குடியிருப்புகளை அகற்றினால் எங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கும். ஆகவே அந்த முடிவை கைவிட மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதோடு எங்கள் அனைவருக்கும் அதே இடத்தில் வீட்டுமனை பட்டா வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனர்.

இதை கேட்டறிந்த கலெக்டர் சுப்பிரமணியன், இதுகுறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Next Story