ரேஷன் பொருட்களை கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை


ரேஷன் பொருட்களை கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை
x
தினத்தந்தி 11 May 2018 5:03 AM GMT (Updated: 11 May 2018 5:03 AM GMT)

ரேஷன் பொருட்களை கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் தன்னார்வ நுகர்வோர் அமைப்பினர்களுக்கான மாவட்ட அளவிலான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ராஜேந்திரன் மற்றும் தன்னார்வ நுகர்வோர் அமைப்பினர், அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கலெக்டர் சுப்பிரமணியன் கூறியதாவது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களின் இருப்பு விவரங்களை தகவல் பலகையில் எழுதி வைக்க வேண்டும். விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அத்தியாவசிய பொருட்களை வாகனங்களில் கொண்டு செல்ல ஏதுவாக அங்குள்ள ரெயில்வே சுரங்கப்பாதைக்கு அருகே உள்ள மணல் குவியலை உடனே நகராட்சி நிர்வாகத்தினர் அகற்ற வேண்டும்.

மேலும் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர்களை வணிக உபயோகத்திற்கு பயன்படுத்தினால் அவற்றை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல் ரேஷன் பொருட்களை கடத்துபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story