மாவட்டத்தில் தொடரும் மழையால் நிரம்பும் கண்மாய்கள் பராமரிப்பு இல்லாததால் வீணாகும் தண்ணீர்


மாவட்டத்தில் தொடரும் மழையால் நிரம்பும் கண்மாய்கள் பராமரிப்பு இல்லாததால் வீணாகும் தண்ணீர்
x
தினத்தந்தி 11 May 2018 6:03 AM GMT (Updated: 11 May 2018 6:03 AM GMT)

விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கோடை மழையால் பல இடங்களில் கண்மாய்கள் நிரம்பி வருகின்றன. ஆனால் போதிய பராமரிப்பு இல்லாததால் சில கண்மாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகும் நிலை உள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் 900-க்கும் மேற்பட்ட பொதுப்பணித்துறை மற்றும் ஒன்றிய கண்மாய்கள் உள்ளன. கடந்த காலங்களில் கண்மாய்களை மராமத்து செய்ய ஐரோப்பிய யூனியன் நிதி கிடைத்து வந்தநிலையில் கண்மாய்கள் முறையாக பராமரிக்கப்பட்டு வந்தன. தற்போது ஆண்டுதோறும் தேவைக்கு ஏற்ற அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படாத நிலையில் கண்மாய்கள் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது மேலும் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியின் மூலம் செய்யப்படும் கண்மாய் மராமத்து வேலைகளும் முறையாக செய்யப்படவில்லை. இந்தநிலையில் கடந்த ஒருவாரத்திற்கு மேலாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் கண்மாய், ஊருணிகள் நிரம்பி வருகின்றன.

இதற்கிடையில் கடந்த 2 நாட்களாக மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், விருதுநகர், வெம்பக்கோட்டை என பல இடங்களில் பலத்த மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- ஸ்ரீவில்லிபுத்தூர்-33, சிவகாசி-10.3, விருதுநகர்-74, ராஜபாளையம்-36, காரியப்பட்டி 23.4, வத்திராயிருப்பு-12, பிளவக்கல் அணை-36, குல்லூர் சந்தை அணி-104, வெம்பக்கோட்டை-6.5.

மாவட்டத்தில் பலத்த மழை பெய்துள்ளதால் கண்மாய்கள் நிரம்பி வரும் நிலையில், போதிய பராமரிப்பு இல்லாததால் சில கண்மாய் கரைகள் பலம் இழந்த நிலையில் உள்ளதால் உடைப்பு ஏற்பட்டு விடுமோ என கிராமமக்கள் அச்சமடையும் நிலை உள்ளது. விருதுநகர் அருகே பட்டம்புதூர் கண்மாய் பொதுப்பணித்துறையினரால் மராமத்து செய்யப்பட்டு வருகிறது. கண்மாய் மடைகளை உடைத்துவிட்டு அதனை அடைப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் கரைகளை உயர்த்தும் பணிகள் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் பெய்த மழையால் கண்மாய்க்கு வந்த தண்ணீர் முழுவதும் வெளியேறி அருகில் பருத்தி சாகுபடி செய்யப்பட்ட நிலத்தின் வழியாக ஓடி பருத்தி பயிர்களை சேதப்படுத்தி விட்டது. இதேபோன்று சில கண்மாய்களிலும் கரைகள் உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது.

எனவே மழை பெய்யும் காலத்தில் கிடைக்கும் தண்ணீரை வீணாக்காமல் சேமித்து வைக்க கண்மாய் கரைகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுப்பணி துறையினருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story