சர்க்கஸ் வளர்ந்த கதை!


சர்க்கஸ் வளர்ந்த கதை!
x
தினத்தந்தி 11 May 2018 10:08 AM GMT (Updated: 11 May 2018 10:08 AM GMT)

சர்க்கஸ் என்றால் குட்டீஸ் உங்களுக்கு கொள்ளை சந்தோஷம் வருமல்லவா? பெரியவர்களையும்கூட குழந்தைபோல குதூகலமாக்கக்கூடியது சர்க்கஸ்.

வேடிக்கைகளையும், வியப்பான செய்கைகளையும் செய்து மக்களை மகிழ்விக்கும் சர்க்கஸ், ரோமானியர்களால் ஏற்பட்ட கலையாகும்.

சர்க்கஸ் என்பது லத்தின் மொழிச் சொல்லாகும். அதற்கு வட்டம் அல்லது வட்ட அரங்கம் என்று பொருளாகும். அப்படி இருந்தாலும் ஆரம்ப காலத்தில் அரங்கங்களில் எல்லாம் சர்க்கஸ் நடக்கவில்லை. வெட்டவெளி மைதானத்தில் மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் சர்க்கஸ் நடந்தது. சுமார் 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பே சர்க்கஸ் பிரபலமானதாக இருந்துள்ளது. கி.மு. 600-ல், 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் பார்வையிட்ட பிரமாண்ட சர்க்கஸ் நிகழ்ச்சியை மாக்சிமஸ் சர்க்கஸ் நிறுவனம் நடத்தி உள்ளது.

அப்போதெல்லாம் இப்போதிருக்கும் வேடிக்கைகள் சர்க்கசில் இருந்ததில்லை. பந்தயப் போட்டி, வீர விளையாட்டுகளையே வேடிக்கையாகவும், மூர்க்கத்தனமாகவும் நடத்திக் காட்டி பார்வையாளர்களை கவர்ந்தார்கள் சர்க்கஸ் வீரர்கள். கிளாடியேட்டர்கள் என்று இந்த மூர்க்க வீரக் கலைஞர்கள் அழைக்கப்பட்டனர். சில வேளைகளில் போட்டியாளர்களில் ஒருவர் இறக்கும் வரை சர்க்கஸ் நடைபெறும். பார்வையாளர்களும் அதை ரசனையுடன் பார்வையிட்டார்கள். கைதிகளையும், ஒதுக்கப்பட்டவர்களையும் மைதானத்தின் நடுவில் விட்டு, சிங்கம், புலி போன்ற விலங்குகளுடன் போராடவிடும் நிகழ்வுகளும் அப்போது நிகழ்ந்தது. கொலோசியம் அரங்கம் இதுபோன்ற விளையாட்டுகளுக்குப் பெயர்பெற்றது. இப்படி வீர பராக்கிரமத்தையும், மூர்க்கத்தனத்தையும் நடத்தும் அரங்குகளே சர்க்கஸ் அரங்கு அல்லது ரிங்குகள் எனப்பட்டன.

இப்போதுள்ளதுபோல வேடிக்கை நிகழ்வுகள் கொண்ட நவீன சர்க்கஸ் இங்கிலாந்தில் தோன்றியது. 1769-ல், பிலிப் ஆஸ்லே என்பவர் கடிவாளம், சேணம் எதுவும் இல்லாத குதிரையின் முதுகில் எதையும் பிடிக்காமல் நின்றபடி சவாரி செய்து பார்வையாளர்களை மகிழ்வித்தார். இதுவே அன்றைய சர்க்கசின் வியப்பூட்டும் நிகழ்ச்சி. இதற்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்ததால் அவர் ராயல் குரோவ் சர்க்கஸ் என்ற பெயரில் இந்த சாகசத்தை எங்கும் நிகழ்த்திக் காட்டத் தொடங்கினார். அதைப்பின்பற்றி ஐரோப்பிய நாடுகளிலும், ரஷியாவிலும் சாகச சர்க்கஸ் நிகழ்வுகள் பரவின.

சர்க்கசில் விலங்குகளை பழக்கப்படுத்தியவர் ஜான்பூல் என்ற அமெரிக்க சர்க்கஸ் கலைஞர் ஆவார். அவர் 1785-ல், அவர் கோமாளிகளையும் அறிமுகம் செய்தார். ேகாமாளிகள் பாடியும் ஜோக் சொல்லியும் சிரிக்க வைத்தனர். குதிரையின் முதுகில் மதுபான பாட்டிலை நிற்க வைத்து, அது கீழே விழாமல் குதிரை ஓடுவது ஒரு வேடிக்கை மற்றும் சாதனை நிகழ்வாக இருந்தது. அவர் புகழ் பெறத் தொடங்கியதும் ஓரிடத்தில் சர்க்கஸ் நடத்துவதைவிட்டுவிட்டு மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் சர்க்கஸ் நடத்தத் தொடங்கினார். சர்க்கஸ் நிறுவனங்களும் பெருகியது. சர்க்கஸ் வளர்ந்தது.

மக்களை கவர்வதற்காக புதுப்புது உத்திகளையும், வித்தைகளையும் சர்க்கசில் சேர்க்க ஆரம்பித்தார்கள். சிங்கம், கரடி, புலி, யானை, கிளி, புறா என பறவைகளும், விலங்குகளும் சர்க்கசில் சாகசம் காட்டின. பார் கம்பிகளில் கழைக்கூத்தாடிகள் பறந்து மகிழ்வித்தார்கள். கோமாளிகளின் கூத்தில் மக்கள் மனம் மகிழ்ந்து சில்லறைகளை வீசி பாராட்டினார்கள்.

1862-ல்தான் கூடாரத்திற்குள் சர்க்கஸ் நடத்தப்பட்டது. சர்க்கஸ்காரர்களின் வினோத உடைக்கு காரணமானவர் நெல்சன் ஹோவர் என்ற சர்க்கஸ்காரர் ஆவார். அவர் நிகழ்ச்சிக்குத் தயாரானபோது நீண்ட கால்டவுசர் உள்ளாடையுடன் இருந்தார். மேலே அணியக்கூடிய உடை வந்து சேராததால், அப்படியே குதிரைமீது சவாரி செய்து வேடிக்கை காட்டினார். அவரது உடையும் ரசிகர்களை ஈர்த்தது. அது சவாரி செய்ய எளிமையாக இருந்ததால் எளிய உடையுடன் சர்க்கஸ் கலைஞர்கள் மக்கள் முன் தோன்ற ஆரம்பித்தார்கள். ஆண்களும், பெண் கலைஞர்களும் தங்கள் சாகசங்களுக்கு ஏற்ற உடைகளையும், வேடிக்கையான ஆடைகளையும் அணியத் தொடங்கினார்கள்.

தாடியுள்ள பெண், குள்ளமனிதன், ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள், ராட்சத மனிதன் போன்ற வினோதமானவற்றை காட்சிப் பொருளாக சர்க்கசில் சேர்த்தவர் அமெரிக்கர் பி.டி.பார்னம் ஆவார். இவரது சர்க்கசிற்கு அமெரிக்காவில் கிராக்கி அதிகம் இருந்தது. இவர்தான் சர்க்கசில் யானையை முதன் முதலில் பயன்படுத்தியவர்.

இன்றும் உலகம் முழுவதும் புகழ்பெற்ற சர்க்கஸ் கம்பெனிகள் மக்களை மகிழ்விக்கின்றன. ஆனால் சர்க்கசிற்கு கிடைத்த வரவேற்பு குறைவால் சின்னச்சின்ன சர்க்கஸ் குழுக்கள் மறைந்து வருகின்றன. 

Next Story