மோசடி மன்னன்..!


மோசடி மன்னன்..!
x
தினத்தந்தி 11 May 2018 10:48 AM GMT (Updated: 11 May 2018 10:48 AM GMT)

தன்னை பணக்காரன், கோடீஸ்வரன் என்று ஏமாற்றும் பேர்வழிகளை பார்த்திருப்போம்.

மவுரிஸ் அன்ட்ரோலி கொஞ்சம் வித்தியாசமாக யோசித்திருக்கிறார். அதனால்தான் தன்னை மொன்டெனெக்ரோ நாட்டின் இளவரசர் என கதைக்கட்டியிருக்கிறார். இதில் கொடுமை என்ன தெரியுமா...? இந்த மோசடி மன்னனின் ஏமாற்றுவேலை தெரியாமல், உலக நாடுகள் இவரை இளவரசராகவே மதித்திருக்கிறது. சில நாடுகள் இந்த மோசடி மன்னனுக்கு ராஜ உபசரிப்புடன், இலவச நில-புலன்களையும் வழங்கியிருக்கிறது. இப்படி நாசூக்காக ஏமாற்ற தெரிந்தவர், ஓட்டல் கட்டண விஷயத்தில் கோட்டைவிட, இந்த மோசடி இளவரசரை சிறைபிடித்துவிட்டனர். இந்த மோசடி மன்னனின் கதை, சுவாரசியமானது.

மொன்டெனெக்ரோவின் இளவரசர் என ஊரை ஏமாற்றி வந்த மவுரிஸ், அதை நம்பவைக்க பல முயற்சிகளை செய்திருக்கிறார். தங்கள் குடும்பம் பல நூற்றாண்டுகளாக எப்படி ஆட்சி செய்து வந்தது, யார் யார் ஆண்டனர் போன்ற ஏமாற்று கதைகளை ஒன்று சேர்த்து தனி புத்தகம் ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார். அதுபோக அரச குடும்ப தோரணையில் புகைப்படங்கள், அரச முத்திரைகள், பதக்கங்கள், போர்க் கருவிகள் போன்றவற்றை தன்னுடைய பங்களாவில் காட்சிப்படுத்தி இருக்கிறார். உலக பிரபலங்களை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து விருந்து நிகழ்ச்சிகளையும் நடத்தியிருக்கிறாராம். இதனால் மோசடி மன்னனின் புகழ் ஐரோப்பா முழுவதும் பரவியிருக்கிறது. அதோடு அரச குடும்பத்திற்கு வழங்கப்படும் ராஜ மரியாதையையும், வெகுமதிகளையும் அள்ளியிருக்கிறார். ஆனால் என்ன...? இவரது சாயம் வெகு விரைவிலேயே வெளுத்துவிட்டது.

கடந்த ஆண்டு இத்தாலியில் உள்ள ஆடம்பர விடுதியில் தங்கியவர், விடுதிக்கான கட்டணத்தை மொன்டெனெக்ரோ தூதரகத்துக்கு அனுப்பிவிடும்படி சொல்லிவிட்டார். ஆனால் தூதரகம் இப்படி ஓர் இளவரசர் தங்கள் நாட்டில் இல்லை என்றும் கட்டணத்தைச் செலுத்த முடியாது என்றும் தெரிவித்துவிட்டது. இதனால் சந்தேகமடைந்த இத்தாலி காவல் துறை, மோசடி மன்னனை ரகசியமாக கண்காணித்தனர். அதில் அவரது பித்தலாட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதனால் மோசடி மன்னன் சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார். இவரது வழக்கை விசாரித்த நீதிபதிகள், அவரது கதையைக் கேட்டு வாய்விட்டு சிரித்திருக்கிறார்கள். 

Next Story