காங்கேயம் அருகே லாரி-ஸ்கூட்டர் மோதல்; பனியன் நிறுவன தொழிலாளி பலி


காங்கேயம் அருகே லாரி-ஸ்கூட்டர் மோதல்; பனியன் நிறுவன தொழிலாளி பலி
x
தினத்தந்தி 11 May 2018 9:45 PM GMT (Updated: 11 May 2018 7:14 PM GMT)

காங்கேயம் அருகே லாரியும்- ஸ்கூட்டரும் மோதிக்கொண்ட விபத்தில் பனியன் நிறுவன தொழிலாளி பலியானார்.

காங்கேயம்,

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள ஆலாம்பாடி கிராமம் கல்லேரியை சேர்ந்தவர் முருகன். கூலித்தொழிலாளி. இவரது மகன் அஜித்குமார் (வயது 19). இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்துவந்தார்.

இவர் கடந்த 9-ந்தேதி வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டு திருப்பூரில் இருந்து இரவு பஸ்சில் காங்கேயத்திற்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து தன்னுடைய ஸ்கூட்டரில் தனது சொந்த ஊருக்கு சென்றுகொண்டிருந்தார்.

இரவு 9.15 மணி அளவில் காங்கேயம்-சென்னிமலை ரோட்டில் உள்ள நெய்க்காரன்பாளையம் என்ற ஊருக்கு அருகே சென்றபோது அங்குள்ள ஒரு பெட்ரோல் பங்கில் இருந்து ஒரு லாரி வெளியே மெயின் ரோட்டிற்கு வந்துள்ளது. அப்போது காங்கேயத்தில் இருந்து அஜித்குமார் ஓட்டிச்சென்ற ஸ்கூட்டர் எதிர்பாராதவிதமாக அந்த லாரியில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த அஜித்குமாரை காங்கேயம் அரசு மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அங்கிருந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இரவு அஜித்குமார் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து காங்கேயம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாலா வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Next Story