கள்ளத் தொடர்பை தட்டி கேட்டதால் மனைவி கழுத்தை இறுக்கி கொலை, கைதான தொழிலாளி வாக்குமூலம்


கள்ளத் தொடர்பை தட்டி கேட்டதால் மனைவி கழுத்தை இறுக்கி கொலை, கைதான தொழிலாளி வாக்குமூலம்
x
தினத்தந்தி 11 May 2018 10:00 PM GMT (Updated: 11 May 2018 8:12 PM GMT)

கள்ளத்தொடர்பை தட்டி கேட்டதால் மின்வயரால் மனைவியின் கழுத்தை இறுக்கி கொலை செய்து தூக்கில் தொங்க விட்டேன் என்று தொழிலாளி வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஜோலார்பேட்டை,

ஏலகிரிமலையில் உள்ள பள்ளகனியூரை சேர்ந்தவர் வெங்கட்ராமன், தொழிலாளி. இவரது மனைவி சந்திரமதி (வயது 23). இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. துர்கா (5), கனிஷ்கா (3) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். கடந்த சில மாதமாக கணவன், மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்திரமதி உடலில் காயங்களுடன் தூக்கில் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து சந்திரமதியின் தாயார் நிலாவூரை சேர்ந்த ஜெயலட்சுமி தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி ஏலகிரிமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் (பொறுப்பு) மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர்.

இது பற்றி வெங்கட்ராமனை அழைத்து போலீசார் விசாரணை நடத்தியதில், முன்னுக்கு பின் முரணான பதில்களை தெரிவித்தார். பின்னர் மனைவி சந்திரமதியை மின்வயரால் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு, தூக்கில் தொங்கவிட்டதை வெங்கட்ராமன் ஒப்புக் கொண்டார்.

இதுகுறித்து வெங்கட்ராமன் அளித்த வாக்குமூலம் வருமாறு:-

எனக்கும், மேட்டுகனியூரை சேர்ந்த பெண் ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. இதனை சந்திரமதி தட்டிக்கேட்டார். இதனால் எனக்கும், மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் ஆத்திரமடைந்த நான், மின்வயரால் சந்திரமதியின் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு, தூக்கில் தொங்கவிட்டேன்.

பின்னர் அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்றுவிட்டேன். மறுநாள் அங்கிருந்தவர்கள் எனக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். நானும் எதுவும் தெரியாதது போல், அழுதபடி நாடகமாடினேன். தற்போது போலீஸ் விசாரணையில் மாட்டிக் கொண்டேன்.

இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.

அதைத்தொடர்ந்து வெங்கட்ராமனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Next Story