டாஸ்மாக் மதுபாட்டிலில் கிடந்த நத்தை குடிமகன்கள் அதிர்ச்சி


டாஸ்மாக் மதுபாட்டிலில் கிடந்த நத்தை குடிமகன்கள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 11 May 2018 9:13 PM GMT (Updated: 11 May 2018 9:13 PM GMT)

டாஸ்மாக் மதுபாட்டிலில் நத்தை கிடந்ததால் குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அரியலூர்,

அரியலூரில் இருந்து கள்ளங்குறிச்சி செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. நேற்று மதியம் கடை திறந்த சிறிது நேரத்தில் அரியலூரை சேர்ந்த தொழிலாளியான அய்யப்பன் (வயது 40) என்பவர் மது பாட்டில் ஒன்று வாங்கினார். இதனையடுத்து அவர் வாங்கிய பாட்டிலில் சேதம் ஏதும் ஏற்பட்டிருக்கிறதா? என்று பாட்டிலை பார்த்தார். .

அப்போது அந்த மதுபாட்டில் உள்ளே நத்தை ஒன்று செத்து கிடந்ததை கண்ட அய்யப்பன் அதிர்ச்சியடைந்தார். பின்னர் டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் நத்தை செத்து கிடந்த மது பாட்டிலை காண்பித்து அய்யப்பன் முறையிட்டார். அப்போது ஊழியர்கள் உற்பத்தி செய்கிற இடத்திலேயே நத்தை விழுந்திருக்கலாம் என தெரிவித்தனர்.

குடிமகன்கள் அதிர்ச்சி

இதனையடுத்து, அங்கு மதுபாட்டில்கள் வாங்க வந்த மற்றவர்களும் இதுகுறித்து கேட்டனர். இதனால் கடை ஊழியர்களுக்கும், மதுபாட்டில்கள் வாங்க வந்தவர்களுக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அய்யப்பன் அந்த மதுபாட்டிலுடன், அதனை வாங்கியதற்கான ரசீதை ஊழியர்களிடம் வாங்கி விட்டு வீட்டிற்கு புறப்பட்டார். மதுபாட்டிலில் நத்தை செத்து கிடந்தது குடிமகன்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story