மணக்குடியில் பட்டப்பகலில் துணிகரம் வீட்டில் துணி தைத்துக்கொண்டிருந்த பெண்ணிடம் 11 பவுன் சங்கிலி பறிப்பு


மணக்குடியில் பட்டப்பகலில் துணிகரம் வீட்டில் துணி தைத்துக்கொண்டிருந்த பெண்ணிடம் 11 பவுன் சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 11 May 2018 9:15 PM GMT (Updated: 11 May 2018 9:15 PM GMT)

மணக்குடியில் வீட்டில் துணி தைத்துக்கொண்டிருந்த பெண்ணிடம் 11 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

மேலகிருஷ்ணன்புதூர்,

சுசீந்திரம் போலீஸ் சரகம் மணக்குடி, மேல ஓ.எம்.சி.ஏ. காலனியை சேர்ந்தவர் இருதயதாசன். இவரது மனைவி ரெஜின்மேரி (வயது 42). இவர் சம்பவத்தன்று மாலையில் வீட்டின் ஜன்னல் ஓரம் அமர்ந்து துணி தைத்து கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த மர்ம நபர் ஜன்னல் வழியாக கையைவிட்டு ரெஜின்மேரியின் கழுத்தில் கிடந்த 11 பவுன் தங்க சங்கிலியை பறித்தார்.

இதனால், அதிர்ச்சி அடைந்த அவர், ‘திருடன்.... திருடன்...’ என கூச்சல் போட்டார். உடனே, மர்ம நபர் நகையுடன் தப்பி ஓடிவிட்டான்.

இதற்கிடையே ரெஜின்மேரி சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் கொள்ளையனை பின் தொடர்ந்து விரட்டி சென்றனர். ஆனால், அதற்குள் கொள்ளையன் தலைமறைவாகி விட்டான்.

வலைவீச்சு

இதுகுறித்து சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும், அந்த பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடிவருகிறார்கள். பட்டப்பகலில் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உள்ளூரை சேர்ந்தவரா?

நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர் உள்ளூரை சேர்ந்தவராக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story