நெல்லை அருகே ‘மரச்சாமியார்’ தீக்குளித்து தற்கொலை முயற்சி தான் வளர்த்த மரங்களை மின்வாரியத்தினர் வெட்டியதால் விரக்தி


நெல்லை அருகே ‘மரச்சாமியார்’ தீக்குளித்து தற்கொலை முயற்சி தான் வளர்த்த மரங்களை மின்வாரியத்தினர் வெட்டியதால் விரக்தி
x
தினத்தந்தி 11 May 2018 9:30 PM GMT (Updated: 11 May 2018 9:29 PM GMT)

நெல்லை அருகே, தான் வளர்த்த மரங்களை மின்பாதை அமைக்க மின்வாரியத்தினர் வெட்டி அப்புறப்படுத்தியதால் மனமுடைந்த மரச்சாமியார் நேற்று தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

நெல்லை, 

நெல்லை அருகே, தான் வளர்த்த மரங்களை மின்பாதை அமைக்க மின்வாரியத்தினர் வெட்டி அப்புறப்படுத்தியதால் மனமுடைந்த மரச்சாமியார் நேற்று தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவரை போலீசார் காப்பாற்றினர். பின்னர் அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மரச்சாமியார் 

நெல்லை அருகே உள்ள ராஜவல்லிபுரத்தை சேர்ந்தவர் மரச்சாமியார் அர்ச்சுனன் (வயது 53). இவர் சாலையோரங்களில் மரங்களை நட்டு, அவற்றை பராமரித்து வருகிறார். இதனால் இவர், மரச்சாமியார் அர்ச்சுனன் என்ற அழைக்கப்பட்டு வருகிறார். இதில் ராஜவல்லிபுரத்தில் இருந்து நெல்லைக்கு செல்லும் சாலையையொட்டி உள்ள குளக்கரையில் 100–க்கும் மேற்பட்ட மரங்களை நட்டு பராமரித்து வருகிறார். இந்த நிலையில் இந்த ரோட்டில் மின்பாதை அமைப்பதற்காக மின்வாரிய ஊழியர்கள் ஏற்பாடு செய்தனர். இதனை தடுத்து நிறுத்துமாறு அர்ச்சுனன் நெல்லை மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தும், பலன் இல்லை. மின்பாதை அமைக்க மின்வாரியத்தினர் அவர் பராமரித்து வந்த பெரும்பாலான மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர்.

வாட்ஸ்–ஆப் வீடியோ 

இதையடுத்து நேற்று அர்ச்சுனன், வாட்ஸ்–அப் மூலம் ஒரு வீடியோ காட்சியை வெளியிட்டார். அதில் அவர் கண்ணீர் விட்டு கதறியவாறு, ‘‘நான் வளர்த்த மரத்தை என்னால் காப்பாற்ற முடியவில்லை, ஊராரும் காப்பாற்றவில்லை, என் தாயே, நான் காலை 11 மணிக்கு சாகப்போகிறேன், இதற்காக யாரையும் தண்டிக்க வேண்டாம்.

இனியாவது மரம் வளர்ப்பதை பற்றி அவர்கள் அறிந்து கொள்ளட்டும், யாரையும் திருத்துவதற்கு நான் தகுதி உள்ளவன் அல்ல, அவர்களே திருந்தட்டும்’’ என்று பேசி உள்ளார்.

தீக்குளித்து தற்கொலை முயற்சி 

இந்த தகவல் பரவியதையடுத்து தாழையூத்து போலீசார் மற்றும் அந்த பகுதி மக்கள் சிலர் அவரை பார்க்க சென்றனர். அப்போது அவர், ராஜவல்லிபுரம் வழியாக வந்த ஒரு பஸ்சை வழிமறித்தார். பின்னர் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

இதைக்கண்ட போலீசார் அவரிடம் இருந்து மண்எண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கைது செய்து தாழையூத்து போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

Next Story