திருத்தணி அருகே குடிநீர் வழங்கக்கோரி கிராம மக்கள் மறியல்


திருத்தணி அருகே குடிநீர் வழங்கக்கோரி கிராம மக்கள் மறியல்
x
தினத்தந்தி 11 May 2018 9:32 PM GMT (Updated: 11 May 2018 9:32 PM GMT)

திருத்தணி அருகே குடிநீர் வழங்கக்கோரி கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருத்தணி, 

திருத்தணியை அடுத்த அகூர் கிராமத்தில் 350 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு கடந்த 5 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அவர்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளானார்கள். இதனால் பெண்கள் நீண்ட தூரம் நடந்து சென்று குடங்களில் தண்ணீர் பிடித்து தேவையை சமாளித்தார்கள்.

இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் நேற்று காலை 8 மணியளவில் திருத்தணி-சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து திருத்தணி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஊராட்சி ஒன்றிய அலுவலர் லட்சுமணன், துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

இதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. பின்னர் அந்த பகுதி மக்களுக்கு டிராக்டர் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. 

Next Story