ஊத்துக்கோட்டை அருகே கொசஸ்தலை ஆற்றில் மீண்டும் தடுப்பணை கட்டும் பணி தொடக்கம்


ஊத்துக்கோட்டை அருகே கொசஸ்தலை ஆற்றில் மீண்டும் தடுப்பணை கட்டும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 11 May 2018 9:50 PM GMT (Updated: 11 May 2018 9:50 PM GMT)

ஊத்துக்கோட்டை அருகே கொசஸ்தலை ஆற்றில் மீண்டும் தடுப்பணை கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

ஊத்துக்கோட்டை,

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி. இந்த ஏரி முழவதுமாக நிரம்பினால் தண்ணீரை கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடுவது வழக்கம். அப்படி திறந்து விடப்படும் தண்ணீர் பூண்டி, ஆற்றம்பாக்கம், ஒதப்பை, சோமதேவன்பட்டு, கொரகண்தண்டலம், மோவூர், மெய்யூர், செம்பேடு, தாமரைபாக்கம், அணைகட்டு வழியாக பாயந்து வங்கக்கடலில் கலக்கிறது. கடந்த 2015-ம் ஆண்டு பெய்த பலத்த மழைக்கு அணை முழவதுமாக நிரம்பியதால் அதிகபட்சமாக வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது.

இப்படி மொத்தம் 30 டி.எம்.சி. தண்ணீர் வீணாக வங்கக்கடலில் கலந்தது. பூண்டி ஏரியில் இருந்து உபரி நீர் வீணாக கடலில் கலப்பதை தடுத்து விவசாயிகள் பயன்படும் விதத்திலும், நிலத்தடி நீர்மட்டம் உயருவதற்காக உன்னத நோக்கத்தோடு தமிழக அரசு ஊத்துக்கோட்டை அருகே உள்ள ஒதப்பை பகுதியில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட முடிவு செய்து ரூ.6 கோடியே 70 லட்சம் ஒதுக்கியது. இந்த நிதியை கொண்டு 200 மீட்டர் நீளத்துக்கு தடுப்பணை அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் தொடங்கப்பட்டது.

மீண்டும் தொடக்கம்

இந்த நிலையில் பூண்டி நீர் பிடிப்பு பகுதி மற்றும் ஒதப்பை பகுதியில் செப்டம்பர் மாதம் பலத்த மழை பெய்ததால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே நடந்து வந்த தடுப்பணை கட்டும் பணிகள் நிறுத்தப்பட்டன. இந்த நிலையில் கோடை வெயில் காரணமாக கொசஸ்தலை ஆறு வறண்டது.

இதையொட்டி தற்போது தடுப்பணை கட்டும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. ஆகஸ்டு மாத இறுதிக்குள் தடுப்பணை கட்டும் பணிகளை முடிக்க உத்தேசித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

Next Story