மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் வேட்பாளர், பிரமுகர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை


மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் வேட்பாளர், பிரமுகர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை
x
தினத்தந்தி 11 May 2018 10:19 PM GMT (Updated: 11 May 2018 10:19 PM GMT)

மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் வேட்பாளர், பிரமுகர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் பணம், முக்கிய ஆவணங்கள் சிக்கின.

பெங்களூரு, 

மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் வேட்பாளர், பிரமுகர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் பணம், முக்கிய ஆவணங்கள் சிக்கின.

காங்கிரஸ் வேட்பாளர்

கர்நாடக சட்டசபை தேர்தல் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி, நேற்று வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்கப்படுவதாக தேர்தல் ஆணையத்திற்கும், வருமான வரித்துறை அதிகாரிகளுக்கும் பல்வேறு புகார்கள் வந்தன. இந்த நிலையில், பீதர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் அசோக் கேனிக்கு சொந்தமான ராம்புரா வீட்டில் வருமான வரித்துறை மற்றும் தேர்தல் அதிகாரிகள் இணைந்து அதிரடி சோதனை நடத்தினார்கள். அதுபோல, பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. ராம்புராவில் உள்ள வீட்டில் சோதனை நடந்தபோது அசோக் கேனி அங்கு இருந்தார்.

இந்த சோதனையின் போது ராம்புராவில் உள்ள அசோக் கேனியின் வீட்டில் பணம் எதுவும் அதிகாரிகளுக்கு கிடைக்கவில்லை. ஆனால் 40-க்கும் மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள், மதுபானங்கள் மட்டுமே சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக வெளிநாட்டு மதுபானங்களையும் அவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதுகுறித்து அசோக் கேனியிடம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மந்திரியின் ஆதரவாளர்

அதுபோல, முதல்-மந்திரி சித்தராமையா போட்டியிடும் பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி தொகுதியை சேர்ந்த ரமேஷ் பூஜாரி என்பவருக்கு சொந்தமான வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அதே பகுதியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் போது முக்கிய ஆவணங்கள், பணம் சிக்கியதாகவும், அதனை அதிகாரிகள் கைப்பற்றி எடுத்துச் சென்றதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுபோன்று, கோலார் மாவட்டம் பேத்தமங்களாவை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் லட்சுமி நாராயணன், மந்திரி வினய்குமாரின் நெருங்கிய ஆதரவாளரும், காங்கிரஸ் பிரமுகருமான பிரசாந்த் என்பவருக்கு சொந்தமான தார்வாரில் உள்ள வீட்டிலும் நேற்று வருமான வரித்துறை மற்றும் தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தி பணம், பரிசு பொருட்கள், முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாக தெரிகிறது. சட்டசபை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் வேட்பாளர், பிரமுகர்கள் வீடுகளில் நடந்த சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கண்டனம்

அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் காங்கிரஸ் பிரமுகர்களை குறிவைத்து மத்திய அரசு வருமானவரித் துறையை ஏவி சோதனை நடத்துவதாக முதல்-மந்திரி சித்தராமையா உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Next Story