உடலை துண்டு துண்டாக வெட்டி கூறுபோட்டனர் நடிகை மீனாட்சி தபா கொலையில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை


உடலை துண்டு துண்டாக வெட்டி கூறுபோட்டனர் நடிகை மீனாட்சி தபா கொலையில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 11 May 2018 11:15 PM GMT (Updated: 11 May 2018 10:33 PM GMT)

நடிகை மீனாட்சி தபா கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மும்பை செசன்ஸ் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு கூறியது.

மும்பை, 

நடிகை மீனாட்சி தபா கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மும்பை செசன்ஸ் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு கூறியது.

நடிகை கொலை

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்தவர் மீனாட்சி தபா(வயது27). இந்தி திரைப்படங்களில் நடித்தார். மேலும் மாடலிங் துறையிலும் பணியாற்றி வந்தார். மும்பையில் படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது இவருக்கு உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த அமித் குமார்(36) மற்றும் அவரது காதலி பிரீத்தி சுரின்(26) ஆகியோருடன் நட்பு ஏற்பட்டது.

இந்தநிலையில் இவர்கள் இருவரும் கடந்த 2012-ம் ஆண்டு மற்றொரு சினிமா படத்தில் நடிக்க வாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக கூறி மீனாட்சி தபாவை அலகாபாத்துக்கு கடத்திச்சென்றனர். இதைத்தொடர்ந்து அவரது பெற்றோரிடம் ரூ.15 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்தனர். ஆனால் அவரது பெற்றோர் வெறும் ரூ.60 ஆயிரத்தை மட்டும் கடத்தல்காரர்கள் கூறிய வங்கிக்கணக்கில் செலுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் மீனாட்சி தபாவை கழுத்தை நெரித்து கொலை செய்தனர். பின்னர் அவரது உடலை துண்டுதுண்டாக வெட்டி பல்வேறு இடங்களில் வீசிவிட்டு தப்பிச்சென்றனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி அமித் குமார் மற்றும் பிரீத்தி சுரின் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

ஆயுள் தண்டனை

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கை விசாரித்த மும்பை கூடுதல் செசன்ஸ் கோர்ட்டு அமித் குமார் மற்றும் பிரீத்தி சுரின் ஆகிய இருவரையும் குற்றவாளிகள் என அறிவித்து கடந்த புதன்கிழமை தீர்ப்பளித்தது.

இந்த நிலையில் தண்டனை மீதான வாதம் நடந்து வந்தது. இதையடுத்து நேற்று கூடுதல் செசன்ஸ் கோர்ட்டு நீதிபதி ஷெட்டே தண்டனை விவரத்தை அறிவித்தார். அப்போது மீனாட்சி தபா கொலை வழக்கு குற்றவாளிகள் அமித் குமார் மற்றும் பிரீத்தி சுரின் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார்.

Next Story