துறையூரில் மகன்கள் கண் முன்னால் கத்தரிக்கோலால் குத்தி மனைவி கொலை முறுக்கு வியாபாரி கைது


துறையூரில் மகன்கள் கண் முன்னால்  கத்தரிக்கோலால் குத்தி மனைவி கொலை முறுக்கு வியாபாரி கைது
x
தினத்தந்தி 11 May 2018 10:40 PM GMT (Updated: 11 May 2018 10:40 PM GMT)

துறையூரில் மகன்கள் கண் முன்னால் கத்தரிக்கோலால் குத்தி மனைவியை கொலை செய்த முறுக்கு வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

துறையூர், 

திருச்சி மாவட்டம் துறையூர் முத்துநகரை சேர்ந்தவர் செல்வம்(வயது46).முறுக்கு வியாபாரி. இவரது மனைவி தமிழ்ச்செல்வி (40) இவர்களுக்கு 3 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் திருமணமாகி கணவருடன் மதுரையில் வசித்து வருகிறார். மற்ற இரு மகள்களும் கோவைபஞ்சுமில்லில் வேலை செய்து வருகிறார்கள். மகன்கள் மலைப்பாண்டி (14), பரணிதரன்(12) ஆகியோர் துறையூரில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கோவையில் இருந்து மகள்கள் அனுப்பிய பணத்தில் செல்வம் நேற்று மது குடித்து கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் தனது மனைவியை எழுப்பிய செல்வம் கோவையில் உள்ள மகள்களை அழைத்து வருகிறேன். அதற்கு பணம் கொடு என்று தனது மனைவியிடம் கேட்டார். ஆனால் மறுபடியும் செல்வம் மது குடிப்பார் என்பதால் தமிழ்ச்செல்வி பணம் கொடுக்கவில்லை.

கத்தரிக்கோலால் குத்திக்கொலை

இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த செல்வம் கத்தரிக்கோலை எடுத்து தமிழ்ச்செல்வியை குத்த முயன்றார். சத்தம் கேட்டு தூங்கி கொண்டு இருந்த மலைப்பாண்டி, பரணிதரன் இருவரும் விழித்துக்கொண்டு தாயை கத்தரிக்கோலால் குத்த முயன்ற தந்தையை தள்ளிவிட்டனர். இதில் தடுமாறி கீழே விழுந்த செல்வம் மீண்டும் கத்தரிக்கோலால் தமிழ்ச்செல்வியின் வயிற்றில் குத்தினார். இதில் தமிழ்ச்செல்வி மயங்கி கீழே விழுந்தார். உடனே தமிழ்ச்செல்வியை துறையூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்கள். மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த துறையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆரூண் மற்றும் போலீசார் மனைவியை கொலை செய்த செல்வத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மகன்கள் கண்முன்னால் செல்வம் தனது மனைவியை குத்தி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story