நவல்பட்டில் நாளை ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரம்


நவல்பட்டில் நாளை ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 11 May 2018 10:47 PM GMT (Updated: 11 May 2018 10:47 PM GMT)

நவல்பட்டில் நாளை ஜல்லிக்கட்டு நடைபெற இருப்பதையொட்டி முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

திருவெறும்பூர்,

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளுள் ஒன்றான ஜல்லிக்கட்டு போட்டி திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு கிராமத்தில் கிராம வழக்கப்படி நவல்பட்டு நவலிக்குளத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி நவலிக்குளத்தில் ஜல்லிக்கட்டுக்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகின்றன. பேரிகார்டு அமைக்கும்பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதனை திருச்சி உதவி கலெக்டர் கமல்கிஷோர் தலைமையில் திருவெறும்பூர் தாசில்தார் ஷோபா மற்றும் பல துறைகளை சேர்ந்த அரசு அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

700 காளைகள்

ஜல்லிக்கட்டு போட்டியில் நவல்பட்டு கிராமத்தில் உள்ள 100 காளைகள் உள்பட 700 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு நேற்று தொடங்கியது. இதில் 450 மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் முதலில் சஞ்சலா கோவில்மாடும், அதன்பிறகு ராப்பூசல், ரெட்டமலை மற்றும் நவல்பட்டு கோவில் மாடுகள் அவிழ்த்து விடப்படுகின்றன. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெறும் மாடுகளுக்கும், காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் சோபா, சைக்கிள், டிரஸ்சிங் டேபிள், கட்டில், கேஸ் ஸ்டவ், மின்விசிறி உள்ளிட்ட பொருட்கள் நவல்பட்டு கிராம கமிட்டி சார்பில் பரிசுகளாக வழங்கப்பட உள்ளன. 

Next Story