நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் 24 மணிநேரமும் மருத்துவர்கள் பணியில் இருக்க நடவடிக்கை


நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் 24 மணிநேரமும் மருத்துவர்கள் பணியில் இருக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 12 May 2018 5:17 AM GMT (Updated: 12 May 2018 5:17 AM GMT)

நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியில் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

நீடாமங்கலம்,

நீடாமங்கலம் அரசினர் மருத்துவமனையில் தினமும் 700-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இவர்களுக்கு பகலில் மட்டுமே அதாவது காலை முதல் மதியம் வரை தான் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கின்றனர். அதன் பிறகு மருத்துவர்கள் இருப்பதில்லை. செவிலியர்களை கொண்டே சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மன்னார்குடி, தஞ்சாவூருக்கு பரிந்துரைக்கும் நிலை உள்ளது. இரவு நேர மருத்துவரும் இருப்பதில்லை. இதை கண்டித்து நீடாமங்கலத்தில் அனைத்து கட்சியினர் மற்றும் வர்த்தகர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட இணை இயக்குனர் (சுகாதார பணிகள்) டாக்டர் செந்தில்குமார் நேற்று நீடாமங்கலத்திற்கு வந்தார். அப்போது அவரை வர்த்தகர் சங்க தலைவர் ராஜாராமன் தலைமையில், வர்த்தகர் சங்க நிர்வாகிகள் சந்தித்து நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் இரவு நேரத்தில் டாக்டர் பணியில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பகல் மற்றும் மதியம் கட்டாயம் மருத்துவர் பணியில் இருக்க வேண்டும். எக்ஸ்ரே எடுப்பவரை நீடாமங்கலத்திலேயே பணியில் இருக்க செய்ய வேண்டும். மருந்துகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.

நீடாமங்கலம் அரசினர் மருத்துவமனைக்கென்று தனியாக மின்மாற்றி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதற்கு இணை இயக்குனர் (சுகாதார பணிகள்) டாக்டர் செந்தில்குமார் கூறுகையில், நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் இன்று ( அதாவது நேற்று) முதல் 24 மணி நேரமும் மருத்துவர்கள்பணியாற்றும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து படிப்படியாக அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார். 

Next Story