ஒகேனக்கல்லில் மீண்டும் பரிசல் சவாரி தொடங்கியது


ஒகேனக்கல்லில் மீண்டும் பரிசல் சவாரி தொடங்கியது
x
தினத்தந்தி 12 May 2018 8:14 AM GMT (Updated: 12 May 2018 8:14 AM GMT)

ஒகேனக்கல்லில் பரிசல் ஓட்டிகளிடம் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு வேலை நிறுத்தம் வாபஸ் பெற்று நேற்று மீண்டும் பரிசல் சவாரி தொடங்கியது.

பென்னாகரம்,

ஒகேனக்கல்லுக்கு ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி என பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். காவிரியின் அழகை காண பரிசலில் செல்லும் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு உடை (லைப்ஜாக்கெட்) வழங்கப்படுகிறது.

இதனிடையே ஒகேனக்கல்லில் அங்கீகரிக்கப்பட்ட பரிசல்களின் எண்ணிக்கை 416 ஆகும். இதில் 75 பரிசல்களுக்கு மட்டுமே பாதுகாப்பு உடைகள் உள்ளன. கோடை விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இவர்கள் காவிரி ஆற்றில் பரிசல் சவாரி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக பாதுகாப்பு உடை வழங்கக்கோரி அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்தநிலையில் கோடை விடுமுறையையொட்டி கூடுதலாக பாதுகாப்பு உடை வழங்கக்கோரி ஒகேனக்கல்லில் பரிசல் ஓட்டிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஒகேனக்கல் பகுதியில் கலெக்டர் மலர்விழி ஆய்வு பணியில் ஈடுபட்டார். பரிசல் ஓட்டிகள் வேலை நிறுத்தம் குறித்து தகவல் அறிந்த கலெக்டர், பரிசல் ஓட்டிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சுற்றுலா பயணிகள் நலன் கருதி கூடுதல் லைப்ஜாக்கெட் வழங்க வேண்டும். குழந்தைகளை பெற்றோருடன் அழைத்து செல்ல அனுமதிக்க வேண்டும். தண்ணீரின் அளவை பொறுத்து 3 வழிப்பாதையில் பரிசல் இயக்க அனுமதி வழங்க வேண்டும் என பரிசல் ஓட்டிகள் வலியுறுத்தினர்.

இது தொடர்பாக உதவி கலெக்டர் ராமமூர்த்தி தலைமையில் தனிக்குழு அமைத்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார். அப்போது உதவி கலெக்டர் ராமமூர்த்தி, துணை போலீஸ் சூப்பிரண்டு அன்புராஜ், தாசில்தார் சேதுலிங்கம் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர். பேச்சுவார்த்தைக்கு பிறகு வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதால் நேற்று காலை முதல் ஒகேனக்கல்லில் மீண்டும் பரிசல் சவாரி தொடங்கியது. ஒகேனக்கல்லுக்கு நேற்று வந்த சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு உடை அணிந்து பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.

Next Story