காவிரி விவகாரத்தில் நல்ல தீர்ப்பு விரைவில் வரும் - அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி


காவிரி விவகாரத்தில் நல்ல தீர்ப்பு விரைவில் வரும் - அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி
x
தினத்தந்தி 12 May 2018 11:00 PM GMT (Updated: 12 May 2018 6:50 PM GMT)

காவிரி விவகாரத்தில் நல்ல தீர்ப்பு விரைவில் வரும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

விழுப்புரம்,

விழுப்புரத்தில் நேற்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நடிகர் எஸ்.வி.சேகர் வழக்கில், தமிழக அரசு நீதிமன்றத்தில் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததால் தான் அவருக்கு முன்ஜாமீன் வழங்கப்படவில்லை. தினகரனும், திவாகரனும் மாறி, மாறி குற்றச்சாட்டுகளை கூறிவருவது குறித்து நாங்கள் ஏற்கனவே சொல்லி வந்தோம். அது எந்த அளவிற்கு உண்மை என்பது தற்போது மக்களுக்கு நன்றாக தெரியும்.

தமிழகத்தில் காவிரி பிரச்சினை என்பது ஜீவாதாரமான பிரச்சினை. கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக போராட்டங்கள் நடந்து வருகிறது. பல்வேறு அரசியல் கட்சிகளும் சட்ட ரீதியான போராட்டம் நடத்தியதன் விளைவாக இன்றைக்கு தமிழக அரசு எடுத்திருக்கின்ற தீவிரமான நடவடிக்கை காரணமாக உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துகின்ற நிலை மத்திய அரசுக்கு ஏற்பட்டு இருக்கிறது. வருகிற திங்கட்கிழமை (நாளை) மத்திய நீர்வளத்துறை செயலாளர் கோர்ட்டில் நேரில் ஆஜராகி வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே விரைவிலேயே நல்ல தீர்ப்பு அமலுக்கு வரும், தமிழக மக்களுக்கு காவிரிநீர் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

ஆகவே அரசு எடுத்திருக்கின்ற நடவடிக்கையின் மூலம் நீண்டகால காவிரி பிரச்சினையில் தீர்வு ஏற்படுகின்ற நிலையில் இன்றைக்கு தமிழகத்தில் இருக்கிற பல்வேறு கட்சி தலைவர்கள், காவிரி பிரச்சினைக்கான தீர்வு தங்களால் தான் வந்தது போன்று சொல்வதற்காக பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை நடத்தி மக்களை குழப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இத்தனை ஆண்டுகாலம் தமிழகத்திலேயே இருந்து கொண்டு தமிழர்களால் வளம் பெற்ற நடிகர்கள், ஜெயலலிதா இல்லை என்பதற்காக அரசியலுக்கு வந்து தாமும் முதல்-அமைச்சர் ஆகி விடலாம் என்ற கனவில் இருக்கின்றனர்.

குறிப்பாக ரஜினிகாந்த், இந்தியாவில் உள்ள நதிகளை இணைக்க வேண்டும் என்று சொல்லி உள்ளார். இது நல்ல கருத்து, அனைவரும் பாராட்டுகிறோம். ஆனால் இவர் ஏதோ புதிதாக கண்டுபிடித்த கருத்து இல்லை.

இந்தியாவில் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் ஜெயலலிதாவும், நதிகளை இணைப்பதுதான் ஒரே வழி, நிரந்தர தீர்வு என்று சொல்லியிருக்கிறார்கள். முதலில் நதிகளை இணைப்பது இருக்கட்டும், நடிகர் ரஜினிகாந்த், தான் பிறந்து வளர்ந்த மாநிலமான கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் கொடுப்பதற்கு என்ன வழி என்று சொல்லிவிட்டு பிறகு கருத்து சொன்னால் நன்றாக இருக்கும்.

இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

Next Story