ராமேசுவரத்தில் வேன்- கார் நேருக்குநேர் மோதல்; பெண்கள் உள்பட 3 பேர் பலி


ராமேசுவரத்தில் வேன்- கார் நேருக்குநேர் மோதல்; பெண்கள் உள்பட 3 பேர் பலி
x
தினத்தந்தி 12 May 2018 10:30 PM GMT (Updated: 12 May 2018 7:15 PM GMT)

ராமேசுவரத்தில் வேன்-கார் நேருக்குநேர் மோதிய விபத்தில் பெண்கள் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ராமேசுவரம்,

காரைக்குடி அருகே உள்ள கல்லலில் இருந்து ராமசாமி மற்றும் அவருடைய குடும்பத்தை சேர்ந்த 16 பேர் ஒரு வேனில் ராமேசுவரம் வந்தனர். இவர்கள் ராமேசுவரம் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு பின்பு அப்துல்கலாம் நினைவிடத்துக்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் அங்கிருந்து வேன் மூலம் ஊருக்கு புறப்பட்டனர்.

இந்த வேன் ராமேசுவரம் ஏகாந்தராமர் கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது வாலிநோக்கத்தில் இருந்து ராமேசுவரம் நோக்கி வந்த காரும் வேனும் நேருக்கு நேர் மோதின. இதில் காரில் வந்த வாலிநோக்கம் நடுத்தெருவை சேர்ந்த நசீரா(வயது 35), உறவினர்களான டிரைவர் காலித்(23), அவருடைய தாய் சாகிலாபானு(45) மற்றும் ஹஜ்மத்நிஷா(25) ஆகியோர் படுகாயம்அடைந்தனர். வேனில் வந்த ராமசாமி(29), முருகேஷ்(18), ராமராஜா(7), புஷ்பலதா(45), மீனாட்சி(70), டிரைவர் குமரேசன் ஆகியோரும் படுகாயம் அடைந்தனர்.

விபத்து நடந்த நேரத்தில் ராமேசுவரத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த அமைச்சர் மணிகண்டன் உடனடியாக காரில் இருந்து இறங்கி உதவி செய்து படுகாயம் அடைந்தவர்களை வாகனத்தில் ஏற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இதில் ஆபத்தான நிலையில் இருந்த நசீரா வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கார் டிரைவர் காலித், அவருடைய தாய் சாகிலாபானு ஆகியோர் சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டும் செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.

அதனை தொடர்ந்து அமைச்சர் மணிகண்டன், மாவட்ட கலெக்டர் நடராஜன் ஆகியோர் ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று காயமடைந்தவர்களை பார்வையிட்டு ஆறுதல் கூறினர். பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுதொடர்பாக தங்கச்சிமடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். 

Next Story