செல்போன் கோபுரங்களை நிர்வகிக்க துணை அமைப்பு ஏற்படுத்துவதற்கு எதிர்ப்பு: பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


செல்போன் கோபுரங்களை நிர்வகிக்க துணை அமைப்பு ஏற்படுத்துவதற்கு எதிர்ப்பு: பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 May 2018 10:30 PM GMT (Updated: 12 May 2018 7:15 PM GMT)

செல்போன் கோபுரங் களை நிர்வகிக்க துணை அமைப்பு ஏற்படுத் துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொள்ளாச்சியில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி,

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் செல்போன் கோபுரங் களை நிர்வகிக்க துணை அமைப்பு ஏற்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் சார்பில் தெருமுனை பிரசாரம் நடத்தப்பட்டு வருகின்றது. பொள்ளாச்சி காந்தி சிலை, ஆனைமலை உள்பட பல்வேறு பகுதிகளில் பிரசாரம் நடைபெற்று வருகிறது.

இதையொட்டி பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் நேற்று ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு கிளை தலைவர் சசிதரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. இதில் செயலாளர் பிரபாகரன், மாவட்ட அமைப்பு செயலாளர் தங்கமணி, அதிகாரிகள் சங்க கிளை செயலாளர் அன்பரசு மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில் சந்திரசேகரன் நன்றி கூறினார்.

இதுகுறித்து பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் கூறிய தாவது:-

பி.எஸ்.என்.எல். நிறுவனத்திடம் உள்ள 66,800 செல் போன் கோபுரங்களை தனியாக பிரித்து நிர்வகிக்க துணை அமைப்பு ஏற்படுத்த முடிவு செய்து உள்ளது. இது லாபம் ஈட்டும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை சீரழிக்கும் முயற்சியாகும். இயற்கை பேரிடர் காலங்களில் சேவை அளிப்பதில் தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் தடுமாறி வருகிறது.

இந்த நிலையில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் சிறந்த சேவையை அளித்து வருகிறது. மாதந்தோறும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட செல்போன் இணைப்புகள் வழங்கி வேகமாக முன்னேறி வருகிறது. தற்போது மத்திய அரசின் இந்த முடிவு பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை முடக்கும் செயலாக உள்ளது. எனவே துணை டவர் நிறுவனம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதுபோன்று கிணத்துக்கடவில் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் சங்கம் சார்பில் தெருமுனைபிரசாரம் நடைபெற்றது. இதற்கு கிணத்துக்கடவு பி.எஸ்.என்.எல். நிர்வாகி மோசஸ் தலைமை தாங்கினார். சிவக்குமார், மாவட்ட உதவித் தலைவர்கள் சசிதரன், தங்கமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளைச் செயலாளர் பிரபாகரன் வரவேற்று பேசினார். இதில், துணை டவர் நிறுவனம் அமைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதில் கிளை பொறுப்பாளர் முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முடிவில் கிணத்துக்கடவு கிளைச் செயலாளர்பஷீர் நன்றிகூறினார். 

Next Story