மானாமதுரை பகுதியில் மழையால் மின் தடை; கிராமங்கள் இருளில் மூழ்கின


மானாமதுரை பகுதியில் மழையால் மின் தடை; கிராமங்கள் இருளில் மூழ்கின
x
தினத்தந்தி 12 May 2018 9:45 PM GMT (Updated: 12 May 2018 7:23 PM GMT)

மானாமதுரை பகுதியில் மழையால் மின்தடை ஏற்பட்டு கிராமங்கள் இருளில் மூழ்கின.

மானாமதுரை,

மானாமதுரையை சுற்றி உள்ள இந்த கிராமப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக ஆங்காங்கே மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதில் மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளம், கொம்புக்காரனேந்தல், முத்தனேந்தல், மேட்டுமடை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மின்சாரம் தொடர்ச்சியாக தடைபட்டது. கட்டிக்குளம் பகுதியில் கடந்த 2 நாட்களாக மின்சாரம் இல்லாமல் இந்த பகுதி முழுவதும் இரவு நேரத்தில் இருளில் மூழ்கியது. இதனால் இந்த பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர்.

இது தவிர இந்த பகுதியில் மின்வினியோகம் இல்லாததால் இந்த பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரப்ப வழியில்லாமல் குடிதண்ணீர் இல்லாமல் இக்கிராம மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இது குறித்து இப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:- மானாமதுரை மின் செயற்பொறியாளர் ஒருவர் மட்டுமே மானாமதுரையில் தங்கிஇருந்து தனது அலுவலக பணிகளை மேற்கொண்டு வருகிறார். மற்ற உதவி மின் பொறியாளர்கள், பணியாளர்கள் மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினசரி வந்து செல்கின்றனர்.

இதுதவிர புதிய மின் இணைப்பு, பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் இந்த பகுதியில் கிடப்பில் உள்ளது. புதிய மின் இணைப்பு வேண்டி மனு கொடுத்தால் புதிய மின் இணைப்பு பெற பல மாதங்கள் ஆகியது. மானாமதுரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பல இடங்களில் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக சென்று விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள் ளது. தற்போது மழையால் மின்தடை ஏற்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட சிவகங்கை கோட்ட மின்வாரிய அதிகாரிகள் இந்த பகுதிக்கு கூடுதலாக மின்வாரிய ஊழியர்களை அனுப்பி வைத்து இந்த பகுதியில் ஏற்பட்டுள்ள மின் பணிகளை கவனித்து தடையின்றி மின் சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story