கோவை அருகே லாரி சக்கரத்தில் சிக்கி 2 தொழிலாளர்கள் பலி


கோவை அருகே லாரி சக்கரத்தில் சிக்கி 2 தொழிலாளர்கள் பலி
x
தினத்தந்தி 12 May 2018 10:00 PM GMT (Updated: 12 May 2018 7:37 PM GMT)

கோவை அருகே லாரி சக்கரத்தில் சிக்கி 2 தொழிலாளர்கள் பலியானார்கள்.

துடியலூர்,

கோவை-ஆனைகட்டி சாலையில் பெரியதடாகம், வீரபாண்டிபிரிவு பகுதிகளில் ஏராளமான செங்கல் சூளைகள் உள்ளன. நேற்று காலை இங்குள்ள செங்கல்சூளை ஒன்றில் இருந்து செங்கல் லோடு ஏற்றிக் கொண்டு ஒரு லாரி கோவை நோக்கி சென்றது.

வீரபாண்டிபிரிவு சந்திப்பு பகுதியில் வந்த போது எதிரே வந்த மொபட் மீது லாரி வேகமாக மோதியது. இதில் மொபட்டில் வந்த தொழிலாளர்கள் 2 பேர் தூக்கி வீசப்பட்டு லாரி சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். விபத்து நடந்த உடன் லாரி டிரைவர் ராஜன்(வயது 31) லாரியில் இருந்து இறங்கி தப்பி ஓடி விட்டார். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தடாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். விபத்தில் பலியான இருவரது உடல் களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்குஅனுப்பி வைத்தனர். விசாரணையில் லாரி மோதி இறந்தவர்கள் கோவில்பாளையத்தை அடுத்துள்ள கோட்டைபாளையம் அண்ணா நகரை சேர்ந்த ராஜேந்திரன் (35), கணேசன்(36) என்று தெரிய வந்தது. மாங்கரை பகுதிக்கு தோட்ட வேலைக்கு சென்ற போது விபத்தில் சிக்கி இவர்கள் இறந்து விட்டனர். தப்பி ஓடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர். லாரி சக்கரத்தில் சிக்கி 2 பேர் பலியான சம்பவம் கோட்டைபாளையத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Related Tags :
Next Story