ஈரோடு கல்வி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிக்கூட வாகனங்களை கலெக்டர் ஆய்வு செய்தார்


ஈரோடு கல்வி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிக்கூட வாகனங்களை கலெக்டர் ஆய்வு செய்தார்
x
தினத்தந்தி 12 May 2018 10:15 PM GMT (Updated: 12 May 2018 8:14 PM GMT)

ஈரோடு கல்வி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிக்கூட வாகனங்களை கலெக்டர் எஸ்.பிரபாகர் ஆய்வு செய்தார்.

ஈரோடு,

ஈரோடு மற்றும் கோபி கல்வி மாவட்டங்களுக்கு உட்பட்ட தனியார் பள்ளிக்கூட வாகனங்கள் ஆண்டுக்கு ஒருமுறை கோடை விடுமுறையின்போது ஆய்வு செய்யப்படுவது வழக்கம். அதன்படி நேற்று தனியார் பள்ளிக்கூட வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

ஈரோடு கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட தனியார் பள்ளிக்கூட வாகனங்கள் ஆய்வுக்காக ஈரோடு திண்டல் அருகில் உள்ள ஏ.ஈ.டி. பள்ளிக்கூட வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இந்த வாகனங்களை கலெக்டர் எஸ்.பிரபாகர் ஆய்வு செய்தார். அப்போது அவர், வாகனங்கள் நல்ல நிலையில் உள்ளதா?, அவசர கதவு பொருத்தப்பட்டு உள்ளதா? முதல் உதவி பெட்டி வைக்கப்பட்டு உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்தார்.

அதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:–

ஈரோடு மற்றும் கோபி கல்வி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிக்கூட வாகனங்கள் நல்ல முறையில் உள்ளனவா? என்று இன்று (நேற்று) ஆய்வு செய்யப்பட்டது. இந்த பணியில் போலீஸ் துறை, போக்குவரத்துத்துறை, தீயணைப்பு துறையை சேர்ந்தவர்கள் ஈடுபட்டனர். மொத்தம் 1,405 வானங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

வாகனங்கள் பாதுகாப்பாக இருக்கிறதா? வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டு உள்ளதா? முதல் உதவி பெட்டி வைக்கப்பட்டு உள்ளனவா? என்பது குறித்து உறுதி செய்யப்படும். மேலும் பள்ளிக்கூடங்கள் திறந்த பின்னரும் வாகனங்கள் ரோடுகளில் ஓடும்போது திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

பள்ளிக்கூடங்களுக்கு வாகனங்களில் செல்லும் மாணவ –மாணவிகள் விபத்து இல்லாமல் சென்றுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆய்வின் போது வாகனங்களில் குறைகள் இருப்பது கண்டறியப்பட்டால் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வாகனங்களை சிறப்பாக இயக்க டிரைவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

இவ்வாறு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் கூறினார்.

ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார், போக்குவரத்து துறை துணை ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ராதாகிருஷ்ணன், ராஜ்குமார், இன்ஸ்பெக்டர் சேகர், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ரகுபதி, வெங்கட்ரமணி, கண்ணன், ஆய்வாளர்கள் சதாசிவம், சுரேந்திரகுமார், முத்துச்சாமி, ராஜேந்திரன், ஏ.ஈ.டி. பள்ளிக்கூட தாளாளர் காசியண்ணன், முதல்வர் முருகசாமி உள்பட பலர் இருந்தனர்.

இதேபோல் கோபி வட்டார போக்குவரத்து சார்பில் சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், பவானி ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிக்கூட வாகனங்கள் ஆண்டுதோறும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான ஆய்வு பணிகள் நேற்று கோபி ஒத்தக்குதிரையில் உள்ள வெங்கடேஸ்வரா ஹை–டெக் என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கோபி ஆர்.டி.ஓ. கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். வட்டார போக்குவரத்து அதிகாரி பழனிவேலு முன்னிலை வகித்தார். இதில், ஆய்வாளர்கள் முகுந்தன் (கோபி), பாமாபிரியா (சத்தியமங்கலம்), மாலதி (பவானி) ஆகியோர் பள்ளிக்கூட வாகனங்களை ஆய்வு செய்தனர். வாகனங்களில் முதலுதவி பெட்டி, தீ அணைப்பான் கருவி உள்பட பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டன. இந்த ஆய்வில் பவானி, சத்தி, கோபி பகுதிகளில் இருந்து மொத்தம் 585 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன.


Next Story