மறைமலைநகர் அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை திருட்டு போலீசார் விசாரணை


மறைமலைநகர் அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை திருட்டு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 12 May 2018 8:54 PM GMT (Updated: 12 May 2018 8:54 PM GMT)

மறைமலைநகர் அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை திருடப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வண்டலூர், 

காஞ்சீபுரம் மாவட்டம் மறைமலைநகர் அருகே உள்ள பேரமனூர் திரு.வி.க. நகர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (வயது 37), இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிக்கொண்டு வேலைக்கு சென்றுவிட்டார். பின்னர் இரவு வீட்டுக்கு திரும்பி வந்துபார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 4 பவுன் தங்க நகை மற்றும் வீட்டில் இருந்த மடிக்கணினி, எல்.சி.டி.டி.வி. போன்றவை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

மற்றொரு வீட்டில்

அதே போல மறைமலைநகரை அடுத்த காட்டாங்கொளத்தூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 39), இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 4 பவுன் தங்க நகை மற்றும் மடிக்கணினி திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இந்த இரு சம்பவங்கள் குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story