திருக்கழுக்குன்றத்தில் போக்குவரத்து நெரிசலால் அவதியுறும் பொதுமக்கள்


திருக்கழுக்குன்றத்தில் போக்குவரத்து நெரிசலால் அவதியுறும் பொதுமக்கள்
x
தினத்தந்தி 12 May 2018 8:56 PM GMT (Updated: 12 May 2018 8:56 PM GMT)

திருக்கழுக்குன்றத்தில் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைகின்றனர்.

கல்பாக்கம், 

கல்பாக்கத்தில் இருந்து திருக்கழுக்குன்றம் வழியாக அரசு மற்றும் தனியார் பஸ்கள் செங்கல்பட்டு, சென்னை உள்பட வெளியூர்களுக்கு தினமும் சென்று வருகின்றன.

கல்பாக்கம், வெங்கப்பாக்கம், சதுரங்கப்பட்டினம் உள்பட பல கிராமங்களில் இருந்தும் பள்ளி கல்லூரி மாணவர்கள், அலுவலகங்கள் மற்றும் கூலி வேலைக்கு செல்பவர்கள் ஆயிரக்கணக்கில் திருக்கழுக்குன்றம் சாலை வழியாக காலை 7 மணி முதல் அரசு, தனியார் பஸ்கள் மற்றும் வாகனங்களில் சென்று வருகின்றனர்.

திருக்கழுக்குன்றத்துக்குள் நுழைந்ததும் மார்க்கெட் பகுதி உள்ளது. இந்த பகுதியில் இருபுறமும் காய்கறி உள்பட சரக்கு லாரிகள் சாதனங்களை ஏற்றி இறக்குவதும் மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோக்கள் நிறுத்துவதும் வழக்கமாக உள்ளது.

பஸ், லாரிகள் எதிர் எதிரே சாலையில் செல்லும் போது இருபுறமும் பிற வாகனங்கள் தொடர்ந்து செல்ல முடியாமல் மிகவும் அவதிப்படுகின்றன. குறிப்பாக காலை, மாலை நேரங்களில் இந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகிறார்கள். மேலும் எதிர்பாராத விபத்து, தீ விபத்து சமயங்களில் மீட்பு வாகனங்கள் இந்த பகுதியை எளிதில் கடந்து செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றன.

எனவே பொதுமக்கள் நெரிசல் அதிகமுள்ள பகுதிகளில் காலை, மாலை வேளையில் சம்பந்தப்பட்ட பகுதி போலீசார் இந்த பகுதியை கண்காணித்து போக்குவரத்து எளிதாக இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். 

Next Story