மோசடி புகார் எதிரொலி: வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்தை முற்றுகையிட்ட பெண்கள்


மோசடி புகார் எதிரொலி: வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்தை முற்றுகையிட்ட பெண்கள்
x
தினத்தந்தி 12 May 2018 10:45 PM GMT (Updated: 12 May 2018 9:23 PM GMT)

மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.

போடி,

போடி அருகே சில்லமரத்துப்பட்டி கிராமத்தில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட தொழிலாளர்களுக்கான சம்பளம் ஆகியவற்றை அப்பகுதி மக்கள் பெற்று வந்தனர்.

இந்த சேவை மையத்தை நடத்தி வந்த அம்மாபட்டியை சேர்ந்த ஒருவர், உதவித்தொகை மற்றும் சம்பளம் வாங்க வருபவர்களிடம் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை செலுத்தினால் மொத்தமாக பணம் தருவதாக கூறினார். இதனை நம்பிய 400-க்கும் மேற்பட்டோர், கடந்த 2016-ம் ஆண்டு முதல் மாதந்தோறும் ரூ.100 முதல் ரூ.500 வரை செலுத்தி வந்தனர். இதுவரை சுமார் ரூ.5 லட்சம் வரை செலுத்தியதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே அந்த சேவை மையத்தை மூடி விட்டு, பணம் வசூலித்த அந்த நபர் வெளியூர் சென்று விட்டதாக தெரிகிறது. இந்தநிலையில் நேற்று திறந்திருந்த சேவை மையத்தில் வேறு நபர் ஒருவர் இருந்தார். அங்கு சென்ற பெண்கள், சேவை மையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த போடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். அதன்பேரில் பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story