திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி வாகனங்களை 31-ந் தேதிக்குள் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் கலெக்டர் தகவல்


திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி வாகனங்களை 31-ந் தேதிக்குள் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 12 May 2018 9:33 PM GMT (Updated: 12 May 2018 9:33 PM GMT)

திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளி வாகனங்களையும் வருகிற 31-ந் தேதிக்குள் ஆய்வுக்குட்படுத்தி சான்று பெற வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டார்.

திருவள்ளூர், 

திருவள்ளூர் கலெக்டர் சுந்தரவல்லி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோடை விடுமுறையில் குறிப்பாக மே மாதத்தில் அனைத்து பள்ளி நிர்வாகிகளும் தங்களிடம் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களையும், தங்களின் பள்ளி எல்லைக்கு உட்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலரிடம் ஆய்வுக்கு உட்படுத்தி சான்றுகள் பெற வேண்டும்.

எனவே தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் (பள்ளி வாகனங்களை ஒழுங்கு மற்றும் கட்டுப்படுத்துதல்) சிறப்பு விதிகள் 2012-ன் படியும், சென்னை போக்குவரத்து ஆணையர் அவர்களின் ஆணையின்படியும், திருவள்ளூர் கலெக்டர் மற்றும் திருவள்ளூர் வருவாய் ஆர்.டி.ஓ. தலைமையில் திருவள்ளூர், செங்குன்றம், பூந்தமல்லி, அம்பத்தூர் பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் காவல்துறை கண்காணிப்பாளர், முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஒழுங்கு நடவடிக்கை

குழு அலுவலர்களால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி நிர்வாகிகளும் தங்களது பள்ளி வாகனங்களை தயார்படுத்தி அறிவிக்கப்படும் பொது இடத்தில் அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலர்களால் அறிவிக்கப்படும் நாட்களில் தங்களது பள்ளி வாகனங்களை ஆய்வுக்கு உட்படுத்தி அதற்கான சான்று பெறப்பட வேண்டும்.

அவ்வாறு சான்று பெறாத பள்ளி வாகனங்கள் வருகிற 31-ந் தேதிக்கு பின்னர் பொது சாலையில் இயக்க அனுமதிக்கப்படமாட்டாது. 31-ந் தேதிக்கு பின்னர் ஆய்வு சான்று பெறாமல் பொதுசாலையில் இயக்கப்படும் பள்ளி வாகனங்களின் அனுமதி சீட்டு ரத்து செய்யப்பட்டு ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story