பிரதமர் பதவிக்கு ராகுல் காந்தி 10 ஆண்டுகளாவது காத்திருக்க வேண்டும் மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே சொல்கிறார்


பிரதமர் பதவிக்கு ராகுல் காந்தி 10 ஆண்டுகளாவது காத்திருக்க வேண்டும் மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே சொல்கிறார்
x
தினத்தந்தி 12 May 2018 10:30 PM GMT (Updated: 12 May 2018 10:17 PM GMT)

பிரதமர் பதவிக்கு ராகுல் காந்தி 10 அல்லது 15 ஆண்டுகளாவது காத்திருக்க வேண்டும் என மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே கூறினார்.

புனே, 

பிரதமர் பதவிக்கு ராகுல் காந்தி 10 அல்லது 15 ஆண்டுகளாவது காத்திருக்க வேண்டும் என மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே கூறினார்.

பிரதமர் பதவி

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி வருகிற 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் தான் பிரதமராக பதவி ஏற்க தயார் என கூறினார். இதுதொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய சமூக நீதித்துறை மந்திரி ராம்தாஸ் அத்வாலே கூறியதாவது:-

ராகுல் காந்தி தனது பிரதமர் ஆகும் கனவு குறித்து பேசி உள்ளார். பிரதமர் ஆகும் குறிக்கோளை வளர்த்துக் கொள்வதில் எந்த தவறும் இல்லை. ஆனால் இதற்காக அவர் 10 அல்லது 15 ஆண்டுகளாவது காத்திருக்க வேண்டும். வருகிற 2019-ம் ஆண்டும் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தான் வெற்றி பெறும்.

கர்நாடகாவில் ஆட்சி அமையும்

கர்நாடகத்தில் லிங்காயத் உள்பட பெரும்பான்மையான சமூகத்தினரின் ஆதரவு பா.ஜனதாவுக்கு உள்ளதால் அங்கு தனி பெரும்பான்மையுடன் பா.ஜனதா ஆட்சி அமைக்கும். பா.ஜனதாவை தலித் விரோத கட்சியாக சித்தரிக்க காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. ஆனால் எது சரி என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக பீமா-கோரேகாவ் வன்முறையில் சாட்சி அளிக்க முன்வந்து மர்மமான முறையில் உயிரிழந்த பூஜா சகத் என்பவரது குடும்பத்தினரை மந்திரி ராம்தாஸ் அத்வாலே சந்தித்து பேசினார்.

Next Story