தூத்துக்குடியில் பரபரப்பு 6 வாகனங்கள் கண்ணாடி உடைப்பு 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை


தூத்துக்குடியில் பரபரப்பு 6 வாகனங்கள் கண்ணாடி உடைப்பு 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 13 May 2018 8:30 PM GMT (Updated: 13 May 2018 7:15 PM GMT)

தூத்துக்குடியில் 6 வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் 6 வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கண்ணாடி உடைப்பு

தூத்துக்குடி 3 செண்ட் அந்தோணியார்புரத்தில் நேற்று முன்தினம் இரவு சிலர் வீட்டின் முன்பு வாகனங்களை நிறுத்தி இருந்தனர். நேற்று அதிகாலையில் அந்த வாகனங்களின் கண்ணாடிகள் மீது யாரோ மர்மநபர்கள் கல்வீசி தாக்கி உடைத்து இருப்பது தெரியவந்தது. அந்த பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த 2 கார், ஒரு ஆட்டோ, ஒரு வேன், ஒரு மினிலாரி, ஒரு லோடு ஆட்டோ ஆகிய 6 வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு இருந்தன.

இதுகுறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பகுதியை சேர்ந்த சிலர் நேற்று முன்தினம் இரவு மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. பின்னர் அவர்கள் அங்கிருந்து செல்லும்போது, அந்த பகுதியில் நின்று கொண்டு இருந்த வாகனங்களின் கண்ணாடிகளை கல்வீசி உடைத்ததாக தெரியவந்தது.

2 பேர் சிக்கினர்

இதுதொடர்பாக தென்பாகம் போலீசார், செல்சினிகாலனியை சேர்ந்த அய்யனார், 3 செண்டை சேர்ந்த தமிழரசன் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story