ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம்


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம்
x
தினத்தந்தி 13 May 2018 10:30 PM GMT (Updated: 13 May 2018 7:25 PM GMT)

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. கோவிந்தா கோவிந்தா, கோஷம் விண்ணை முட்ட பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

ஸ்ரீரங்கம்,

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவதும், 108 வைணவத்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர்த்திருவிழா 11 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான சித்திரை தேர்த்திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினமும் காலை, மாலை வேளைகளில் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

சிறப்பு நிகழ்ச்சிகளாக கடந்த 8-ந் தேதி தங்க கருட வாகனத்திலும், நேற்று முன்தினம் காலை வெள்ளிக்குதிரை வாகனத்திலும் வீதி உலா வந்தார். அன்று மாலை நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் வீதி உலா வந்து, சித்திரைத்தேர் அருகில் வையாளி கண்டருளிய பின் இரவு 9 மணிக்கு கண்ணாடி அறைக்கு வந்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 9-ம் திருநாளான நேற்று காலை தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி உற்சவர் நம்பெருமாள் அதிகாலை 3.45 மணி அளவில் கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு அதிகாலை 4.15 மணியளவில் சித்திரைத் தேர் ஆஸ்தான மண்டபம் வந்து சேர்ந்தார்். காலை 5.15 மணிக்கு மேஷ லக்னத்தில் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பின்னர் காலை 5.55 மணிக்கு திருத்தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா, கோவிந்தா கோஷம் விண்ணைமுட்ட தேரை வடம் பிடித்து இழுத்தனர். கீழச்சித்திரை வீதியிலிருந்து தேர் புறப்பட்டு தெற்கு சித்திரை வீதி, மேற்கு சித்திரை வீதி மற்றும் வடக்கு சித்திரை வீதிகளில் வலம் வந்து, மீண்டும் காலை 9.15 மணிக்கு நிலையை அடைந்தது. பின்னர் தேரின் முன்பு பக்தர்கள் தேங்காய்களை உடைத்தும், நெய் விளக்கு, சூடம் ஏற்றியும் வழிபட்டனர். மேலும் தேரின் முன்பு பக்தர்கள் பக்திபாடல்களை பாடிக் கொண்டே கோலாட்டத்துடன் ஆடியபடியே வந்தனர்.

தேரோட்டத்தில் அமைச்சர் வளர்மதி, குமார் எம்.பி உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். சித்திரை தேர்த்திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் பகுதிகளில் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் மற்றும் தனியார் அமைப்புகள் மூலம் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு நீர் மோர், பானகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தேரோட்டத்தை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் ஆகியவை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தேரோட்டத்தையொட்டி ஸ்ரீரங்கம் பகுதியில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

இன்று (திங்கட்கிழமை) இரவு சப்தாவரணம் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து திருவிழாவுக்கென ஏற்றப்பட்ட கொடி இறக்கப்படும். நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு ஆளும்பல்லக்குடன் ஸ்ரீரங்கம் சித்திரை தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், இணை ஆணையர் ஜெயராமன், அறங்காவலர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர். 

Next Story