போரூர் அருகே மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதல்; 2 வாலிபர்கள் பலி டிரைவர் கைது


போரூர் அருகே மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதல்; 2 வாலிபர்கள் பலி டிரைவர் கைது
x
தினத்தந்தி 13 May 2018 10:45 PM GMT (Updated: 13 May 2018 7:46 PM GMT)

போரூர் அருகே மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதி 2 வாலிபர்கள் இறந்தனர். விபத்துக்கு காரணமான லாரி டிரைவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பூந்தமல்லி,

போரூர் அடுத்த முகலிவாக்கம், சுப்பிரமணிய சாமி கோவில் தெருவை சேர்ந்தவர் மோகன் (வயது 24). துணிக்கடையில் வேலை செய்து வந்தார். இவரது நண்பர் முகலிவாக்கம், மகாலட்சுமி நகரை சேர்ந்த மணிகண்டன் (23). வெல்டிங் கடையில் வேலை செய்து வந்தார். மேலும் உடலில் ‘டாட்டூ’ வரையும் வேலையும் செய்து வந்தார். எனவே இவரை ‘டாட்டூ’ மணி என்றே அவரது நண்பர்கள் அழைத்து வந்துள்ளனர்.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு மோகனும், மணிகண்டனும் போரூரில் உள்ள ஓட்டலில் சாப்பிடுவதற்காக மோட்டார்சைக்கிளில் சென்றனர். மோட்டார்சைக்கிளை மோகன் ஓட்டினார். பின்னால் மணிகண்டன் அமர்ந்து இருந்தார்.

முகலிவாக்கத்தில் இருந்து மவுண்ட் பூந்தமல்லி சாலை, முகலிவாக்கம் சிக்னலில் வந்து திரும்பியபோது நங்கநல்லூரில் இருந்து பூந்தமல்லி நோக்கி வேகமாக வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கி மோகன் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மோகன் உடலை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படுகாயம் அடைந்த மணிகண்டனை மீட்டு ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் திருவள்ளூர் மாவட்டம், மேலக்கோட்டையூரை சேர்ந்த முனுசாமி (45) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ஓட்டலுக்கு சாப்பிட சென்றபோது ஏற்பட்ட விபத்தில் வாலிபர்கள் 2 பேர் இறந்து போன சம்பவம் அந்தப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.


Next Story