கர்நாடக தேர்தல் முடிந்தாலும் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காது - பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேட்டி


கர்நாடக தேர்தல் முடிந்தாலும் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காது - பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேட்டி
x
தினத்தந்தி 13 May 2018 11:00 PM GMT (Updated: 13 May 2018 7:59 PM GMT)

கர்நாடக தேர்தல் முடிந்தாலும் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காது என்று கடலூரில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.

கடலூர்,

பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் பழ.தாமரைக்கண்ணன்-ஜெயந்திதேவி தம்பதியரின் மகள்கள் அருந்தமிழ், அருளினி ஆகியோரின் மஞ்சள் நீராட்டு விழா கடலூர் சுப்புராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில் நேற்று மாலையில் நடைபெற்றது. இதில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரது மனைவி சரசுவதி ராமதாஸ், பசுமை தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

விழாவில் பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி, மாநில சொத்து பாதுகாப்பு குழு தலைவர் டாக்டர் கோவிந்தசாமி, முன்னாள் எம்.பி.தன்ராஜ், ஜி.ஆர்.கே. உரிமையாளர் ஜி.ஆர்.துரைராஜ், ஆனந்தபவன் குரூப் உரிமையாளர் நாராயணன், மூத்த வக்கீல் சிவமணி, சமூக முன்னேற்ற சங்க மாநில தலைவர் சிவபிரகாசம், சுமங்கலி சில்க்ஸ் நிஸ்டர் அலி, கோவன்ஸ் நுரையீரல் சிறப்பு சிகிச்சை மைய டாக்டர் கலைக்கோவன், வக்கீல் பிரபு முத்து, ஆடிட்டர் குமாரமுருகன், என்ஜினீயர் பாலமுருகன், எஸ்.பி.என்டர் பிரைசஸ் உரிமையாளர் சங்கர்பிரகாஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள், முன்னாள் எம்.பி.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், தொழில் அதிபர்கள், கட்சி பிரமுகர்கள் உள்பட பலர் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள்.

முன்னதாக விழாவுக்கு வருகை தந்தவர்களை பழ.தாமரைக்கண்ணன்-பழமலை டிராக்டர்ஸ் உரிமையாளர் ஜெயந்திதேவி குடும்பத்தினர் வரவேற்றனர்.

முன்னதாக டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

கர்நாடக தேர்தல் முடிந்து விட்டது. ஆனாலும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காது. அதற்காக மத்திய அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழகத்தை வஞ்சிக்கிறது. இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டும் தமிழகத்துக்கு ஓர வஞ்சனையாக செயல்படுகிறது.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்பும் ஒரே தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்தான். அவர்தான் தமிழகத்தை ஆளப்போகிறார். கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் பார்க்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story