தமிழில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்கள் வெற்றிபெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்


தமிழில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்கள் வெற்றிபெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்
x
தினத்தந்தி 13 May 2018 11:00 PM GMT (Updated: 13 May 2018 8:06 PM GMT)

தமிழில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்கள் வெற்றிபெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என தொல்.திருமாவளவன் கூறினார்.

மீன்சுருட்டி,

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்துள்ள மீன்சுருட்டில் ஒரு திருமண நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நடந்து முடிந்த நீட் தேர்வில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு தயாரிக்கப்பட்ட கேள்வி தாளில் ஏறத்தாழ 50 பிழைகள் இருந்ததாக சொல்லப்படுகின்றது. இதனால் 196 மதிப்பெண்கள் பெற முடியாத நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு சி.பி.எஸ்.இ. தான் முழு பொறுப்பேற்க வேண்டும்.

வரும் கல்வியாண்டுகளில் கேள்வி தாள்கள் தயாரித்தல், தேர்வு மையங்கள் தேர்வு செய்வது, தேர்வுகளை நடத்துதல் ஆகியவற்றை மாநில கல்வி வாரியத்திடம் அளிக்க வேண்டும். இந்திய அளவில் நீட் தேர்வு கூடாது என்பதே எங்களின் நிலைப்பாடு என்றார். உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கால அவகாசம் கேட்டு இச்சிக்கலை மேலும் நீட்டித்து கொண்டு செல்லும், மத்திய நாடாளுமன்ற தேர்தல் வரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பில்லை என தெரிகிறது. காவிரி பிரச்சினையில் 14-ந் தேதிக்கு பிறகு ஒருங்கிணைந்து இறுதி கட்ட போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிலை உறுவாகும். ஆகவே அனைத்து தரப்பு மக்களும் போராட தயாராக இருக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினை நீதிமன்றத்தில் வழக்கு இருந்தாலும் மக்களின் நலனை காக்க தமிழக அரசு தடைசெய்ய முடியும். 22-ந்தேதி அப்பகுதி மக்கள் சார்பில், நடக்கும் போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story