பெரம்பலூரில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி சென்னை அணி முதலிடம்


பெரம்பலூரில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி சென்னை அணி முதலிடம்
x
தினத்தந்தி 13 May 2018 10:45 PM GMT (Updated: 13 May 2018 8:14 PM GMT)

பெரம்பலூரில் மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் சென்னை அணி முதலிடம் பெற்றது.

பெரம்பலூர்,

பெரம்பலூரில் மாஸ் கைப்பந்து சங்கம் மற்றும் திருவள்ளுவர் மோட்டார் சங்கம் சார்பில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு 6-வது ஆண்டு மாநில அளவிலான பகல் மற்றும் இரவு மின்னொலி கைப்பந்து போட்டிகள் பெரம்பலூர் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள தனியார் மைதானத்தில் 2 நாட்கள் நடந்தன. போட்டிகளை பெரம்பலூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மாணிக்கம், ஈஸ்வர் திருநாவுக்கரசு மற்றும் நாராயணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் பெரம்பலூர், சேலம், கடலூர், சென்னை, நாமக்கல், திருச்சி, அரியலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 28 அணிகள் பங்கேற்றன.

இறுதி போட்டியில் சென்னை அணியும், எஸ்.ஆடுதுறை அணியும் மோதின. இதில் சென்னை அணி 24 புள்ளிகள் பெற்று நேர்செட்டில் எஸ்.ஆடுதுறை அணியை வென்று வெற்றி கோப்பையை கைப்பற்றியது, எஸ்.ஆடுதுறை 14 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும், அரியலூர் இடையக்குறிச்சி அணி 24 புள்ளிகளுடன் 3-வது இடத்தையும், மாஸ் கிளப் அணி 20 புள்ளிகளுடன் 4-வது இடத்தையும் பெற்றன.

தொடர்ந்து வெற்றிபெற்ற அணிகளுக்கு தொழிற் பயிற்சி நிலைய தாளாளர் எசனை நல்லுசாமி, சீலன், தனலட்சுமி சீனிவாசன் குழுமம் சார்பில் முரளி, உடற்கல்வி இயக்குனர் சரணவன் ஆகியோர் முதல் பரிசாக ரூ.15ஆயிரம், 2-வது பரிசாக ரூ.12ஆயிரம், 3-வது பரிசாக ரூ.9 ஆயிரம், 4-வது பரிசாக ரூ.6 ஆயிரம் மற்றும் சுழற்கோப்பை-சான்றிதழ்களை வழங்கினர். போட்டிக்கான ஏற்பாடுகளை சங்க தலைவர் சுரேஷ்குமார், செயலாளர் அதியமான் மற்றும் குழுவினர் செய்திருந்தனர். 

Next Story