மேலப்பாளையத்தில் சிறை கைதிகளின் குழந்தைகளுக்கு கோடை கால பயிற்சி முகாம்


மேலப்பாளையத்தில் சிறை கைதிகளின் குழந்தைகளுக்கு கோடை கால பயிற்சி முகாம்
x
தினத்தந்தி 13 May 2018 9:00 PM GMT (Updated: 13 May 2018 8:15 PM GMT)

மேலப்பாளையத்தில் சிறை கைதிகளின் குழந்தைகளுக்கு கோடை கால பயிற்சி முகாம் நேற்று நடந்தது.

நெல்லை, 

மேலப்பாளையத்தில் சிறை கைதிகளின் குழந்தைகளுக்கு கோடை கால பயிற்சி முகாம் நேற்று நடந்தது.

கோடை கால பயிற்சி முகாம்

பாளையங்கோட்டை சிறையில் உள்ள கைதிகளின் குழந்தைகளின் வாழ்வை நெறிப்படுத்தவும், ஒழுக்கம், நற்பண்பு போன்றவற்றை மேம்படுத்தும் வகையிலும் சிறை கைதிகளின் குழந்தைகளுக்கு கோடைகால பயிற்சி முகாம் மேலப்பாளையம் குறிச்சி புனித தோமையார் உயர்நிலைப்பள்ளிக்கூடத்தில் 2 நாட்கள் நடந்தது. நேற்று முன்தினம் நடந்த தொடக்க விழாவில் கலெக்டர் சந்தீப் நந்தூரி கலந்து கொண்டு தொடங்கி வைத்து பேசினார்.

இதைத்தொடர்ந்து ஆசிரியர் ஞானபன்னீர்செல்வம் பேச்சு திறன் மற்றும் தகவல் தொடர்பு அறிவை மேம்படுத்துதல் என்ற தலைப்பிலும், பேராசிரியர் முருகானந்தம் கவனச்சிதைவு இன்றி கற்பித்தல் என்ற தலைப்பிலும், ஆசிரியர் மஞ்சு ஆங்கிலம் மற்றும் இதர மொழிகளை வாசிக்கும் முறைகள் குறித்தும் பேசினர்.

கைவினை பொருட்கள் தயாரித்தல்

பேராசிரியை ராதா குழந்தைகளின் உரிமை மற்றும் கடமைகள் என்ற தலைப்பிலும், அறிவரசன் அறிவியல் சார்ந்த அறிவை வளர்த்தல் என்ற தலைப்பிலும், ஆசிரியர் கணபதி சுப்பிரமணியன் விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் என்ற தலைப்பிலும் பேசினர்.

முகாமில் சிறை கைதிகளின் குழந்தைகளின் தாய்க்கு கைவினைபொருட்கள் தயாரித்தல் மூலம் வருமானம் பெருக்குவது குறித்து கைவினை பொருட்கள் பயிற்சியாளர்கள் மங்களதேவியும், ராதாகிருஷ்ணனும் அளித்தனர்.

இந்த முகாமில் புனித தோமையார் உயர்நிலைப்பள்ளி தாளாளர் இருதயம், ஜோஸ்பின், ராஜ்மோகன், ராஜா, ஜேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story