தேர்தல் முடிவு வெளியாகாத நிலையில் பா.ஜனதா வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்


தேர்தல் முடிவு வெளியாகாத நிலையில் பா.ஜனதா வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
x
தினத்தந்தி 13 May 2018 10:00 PM GMT (Updated: 13 May 2018 9:50 PM GMT)

சிவமொக்கா, கலபுரகி பகுதிகளில், தேர்தல் முடிவு வெளியாகாத நிலையில் பா.ஜனதா வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் நேற்று பட்டாசு வெடித்து கொண்டாடிய ருசிகர சம்பவம் நடந்துள்ளது.

கலபுரகி, 

சிவமொக்கா, கலபுரகி பகுதிகளில், தேர்தல் முடிவு வெளியாகாத நிலையில் பா.ஜனதா வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் நேற்று பட்டாசு வெடித்து கொண்டாடிய ருசிகர சம்பவம் நடந்துள்ளது.

சட்டசபை தேர்தல்

224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. ஜெயநகர், ராஜராஜேஸ்வரி நகர் தொகுதிகளை தவிர்த்து 222 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. ஒட்டுமொத்தமாக 72.13 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது எனவும், தொங்கு சட்டசபை அமையும் என்றும் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்தன.

நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நிறைவடைந்த பின்னர் நடத்தப்பட்ட கருத்து கணிப்பு முடிவுகளில் 3-ல் பா.ஜனதா அதிக இடங்களை கைப்பற்றும், 2 கருத்துக்கணிப்புகளில் காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றும் எனவும் தகவல் வெளியாகியுள்ளன. இதனால் பா.ஜனதாவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒருவேளை தொங்கு சட்டசபை அமையும் பட்சத்தில் ஜனதாதளம் (எஸ்) கட்சியுடன் பா.ஜனதா கூட்டணி அமைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

இந்த நிலையில் கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. அதற்கு முன்பாகவே பா.ஜனதாவினர் தங்களது கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறுவது உறுதி எனக் கூறி பட்டாசு வெடித்து கொண்டாடிய சம்பவங்கள் சிவமொக்கா, கலபுரகி பகுதிகளில் நேற்று அரங்கேறியது.

அதாவது, சிவமொக்கா நகர் தொகுதியில் பா.ஜனதா சார்பில், அக்கட்சியின் மூத்த தலைவர் ஈசுவரப்பா போட்டியிடுகிறார். இவர் கடந்த 2013-ம் ஆண்டு தேர்தலில் தோல்வி அடைந்திருந்தார். தற்போது அவர் இந்த தொகுதியில் களமிறங்கியுள்ளார். இந்த தேர்தலில் ஈசுவரப்பா வெற்றி உறுதி எனக் கூறி நேற்று அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், ஆடி, பாடியும் கொண்டாடினர்.

அதேப் போல் கலபுரகி மாவட்டம் ஆலந்தா தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் சுபாஷ் குத்தேதாரின் ஆதரவாளர்களும், அவர் வெற்றி பெறுவது உறுதி எனக் கூறி நேற்று பட்டாசு வெடித்து கோலாகலமாக கொண்டாடினர். தேர்தல் முடிவுகள் வெளியாகுவதற்கு முன்பே பா.ஜனதா வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அந்தந்த பகுதிகளில் பரபரப்பாக பேசப்பட்டது.

Next Story