முனிரத்னா எம்.எல்.ஏ.வுக்கு முன் ஜாமீன்; பெங்களூரு கோர்ட்டு உத்தரவு


முனிரத்னா எம்.எல்.ஏ.வுக்கு முன் ஜாமீன்; பெங்களூரு கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 14 May 2018 10:00 PM GMT (Updated: 14 May 2018 7:16 PM GMT)

முனிரத்னா எம்.எல்.ஏ.வுக்கு முன் ஜாமீன் வழங்கி பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


பெங்களூரு,

வாக்காளர் அடையாள அட்டைகள் சிக்கிய விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முனிரத்னா எம்.எல்.ஏ.வுக்கு முன் ஜாமீன் வழங்கி பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு ஜாலஹள்ளியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 8-ந் தேதி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள் சிக்கியது. அந்த வாக்காளர் அடையாள அட்டைகள் ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் வசிக்கும் வாக்காளர்களுக்கு உரியது என்பது தெரியவந்தது. மேலும் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் தருவதாக கூறி, வாக்காளர் அடையாள அட்டைகளை வாங்கி அடுக்குமாடி குடியிருப்பில் வைத்திருந்ததும் தெரிந்தது.

இதன் காரணமாக ராஜ ராஜேஸ்வரி நகர் தொகுதியில் கடந்த 12-ந் தேதி நடைபெற இருந்த சட்டசபை தேர்தல் 28-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வாக்காளர் அடையாள அட்டைகள் சிக்கிய விவகாரம் தொடர்பாக ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியின் எம்.எல்.ஏ. வும், தற்போது வேட்பாளராகவும் நிறுத்தப்பட்டுள்ள முனிரத்னா மீது ஜாலஹள்ளி போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் அவர் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்ற தகவல் வெளியானது.

இதையடுத்து, போலீசார் கைது செய்யாமல் இருக்க தன் மீது போடப்பட்டுள்ள வழக்கு களில் முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி பெங்களூரு கூடுதல் மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் முனிரத்னா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனு மீதான விசாரணை நீதிபதி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது முனிரத்னா சார்பில் ஆஜரான வக்கீல், “வாக்காளர் அடையாள அட்டைகள் சிக்கிய விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வரு கிறது, அடுக்குமாடி குடியிருப்பில் அடையாள அட்டைகளை பதுக்கியது யார்? என்பது இன்னும் தெரியவில்லை. எனவே முனிரத்னாவுக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும்,“ என்று வாதிட்டார்.

இதற்கு அரசு தரப்பு வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, முனிரத்னா எம்.எல்.ஏ.வுக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தார். இதனால் முனிரத்னா எம்.எல்.ஏ. நிம்மதி அடைந்துள்ளார்.

Next Story