வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்தவரின் வீட்டில் திருட்டு


வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்தவரின் வீட்டில் திருட்டு
x
தினத்தந்தி 14 May 2018 10:15 PM GMT (Updated: 14 May 2018 10:10 PM GMT)

தன்னுடைய குழந்தையை பார்க்கும் ஆசையில் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்தவரின் வீட்டில் பொருட்களை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் வடசேரி போலீஸ் சரகத்துக்குட்பட்ட ஆலம்பாறை கிரேஸ்தெருவை சேர்ந்தவர் ராஜகோபால கிருஷ்ணன் (வயது 37). பாலிடெக்னிக் படித்துள்ள இவர், சவூதி அரேபியாவில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவிக்கு கடந்த சில தினங்களுக்கு முன் குழந்தை பிறந்தது. பின்னர் குழந்தையுடன் ராஜகோபால கிருஷ்ணனின் மனைவி, கருங்கலில் உள்ள தாயார் வீட்டில் இருந்தார். இந்த நிலையில் சொந்த ஊருக்கு வந்த ராஜகோபால கிருஷ்ணன் கருங்கலுக்கு சென்று பிறந்த குழந்தையை சந்தோஷத்துடன் பார்த்தார்.

பின்னர் ஆலம்பாறையில் உள்ள அவருடைய வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்புற கதவில் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்த நிலையில் இருந்தது. உடனே அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பொருட்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன.

மேலும் பீரோவிலும் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அதில் ராஜகோபால கிருஷ்ணன் வைத்திருந்த வெள்ளியால் ஆன விளக்கு, கப்புகள் மற்றும் டி.வி.டி. பிளேயர், கேமரா உள்ளிட்ட பொருட்களையும் காணவில்லை. வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட யாரோ மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து பொருட்களை திருடிச் சென்றது தெரியவந்தது. திருட்டு போன பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.60 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜகோபால கிருஷ்ணன் உடனே வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

மேலும் திருட்டு நடந்த வீட்டில் மர்ம நபர்கள் ஏதேனும் தடயங்களை விட்டுச் சென்றனரா? என்று போலீசார் ஆய்வு செய்தனர். அதைத் தொடர்ந்து ராஜகோபால கிருஷ்ணனின் வீட்டுக்கு அருகே எங்கேனும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு இருக்கிறதா? என்று போலீசார் விசாரித்தனர். இந்த துணிகர சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.


Next Story