கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; பெயிண்டர் பலி


கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; பெயிண்டர் பலி
x
தினத்தந்தி 14 May 2018 10:45 PM GMT (Updated: 14 May 2018 10:10 PM GMT)

குலசேகரம் அருகே கார், மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பெயிண்டர் பரிதாபமாக இறந்தார்.

குலசேகரம்,

குலசேகரம் அருகே செருப்பாலூர் ஈஞ்சவிளையை சேர்ந்தவர் ஸ்ரீகண்டன் (வயது 27), பெயிண்டர். இவருடைய நண்பர் அதே பகுதியை சேர்ந்த சஜிகுமார்.

நேற்று முன்தினம் மாலை இவர்கள் இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் செருப்பாலூரில் இருந்து குலசேகரம் நோக்கி புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை சஜிகுமார் ஓட்டி சென்றார். பின்னால் ஸ்ரீகண்டன் அமர்ந்திருந்தார்.

கார் மோதியது

குலசேகரம் அருகே சென்ற போது, எதிரே ஒரு கார் வேகமாக வந்தது. அந்த சமயத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் காரும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன.

இதில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உடனே, அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் விரைந்து வந்து படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பரிதாப சாவு

அங்கிருந்து ஸ்ரீகண்டன் மேல் சிகிச்சைக்காக கேரள மாநிலம் நெய்யாற்றின்கரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் ஸ்ரீகண்டன் பரிதாபமாக இறந்தார். சஜிகுமாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story