கட்டணக்குழுவின் கட்டணத்தை பள்ளிகளில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை முதல்–அமைச்சர் நாராயணசாமி உறுதி


கட்டணக்குழுவின் கட்டணத்தை  பள்ளிகளில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை முதல்–அமைச்சர் நாராயணசாமி உறுதி
x
தினத்தந்தி 14 May 2018 11:15 PM GMT (Updated: 14 May 2018 10:25 PM GMT)

கட்டணக்குழுவின் கட்டணத்தை தனியார் பள்ளிகளில் நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நாராயணசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி,

புதுவையில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக ரங்கசாமி முதல்–அமைச்சராக இருந்தபோது குழு அமைக்கப்பட்டது. ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் 3 பேர் அந்த குழுவில் இடம்பெற்று இருந்தனர். இந்த குழு பலமுறை தனியார் பள்ளி நிர்வாகிகளை அழைத்து கட்டணம் தொடர்பாக விவாதித்து ஒரு முடிவுக்கு வந்தது.

அந்த குழு கல்விக்கட்டணத்தை நிர்ணயம் செய்து அரசுக்கு வழங்கியது. அதுதொடர்பாக சில விளக்கங்களை கேட்டு மாநில அரசு குழுவுக்கு கடிதம் அனுப்பியது. நானும், கல்வி அமைச்சரும் தனியார் பள்ளி உரிமையாளர்களை பலமுறை அழைத்து பேசினோம். தற்போது தனியார் பள்ளிகள் 3 விதமாக பிரிக்கப்பட்டு அதற்குரிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கட்டணக்குழு கேட்ட விவரங்களை, குறிப்பாக ஆசிரியர்களின் சம்பளம், வருமான வரி கணக்கு, அடிப்படை வசதி உள்ளிட்டவற்றை சில பள்ளிகள் தந்தன. சில பள்ளிகள் அதில் எந்த விவரத்தையும் தரவில்லை. அதே நேரத்தில் ஐகோர்ட்டு உத்தரவுப்படி கட்டணக்குழு கட்டணத்தை நிர்ணயம் செய்து அது அமைச்சரவையின் ஒப்புதல் பெற்று கல்வித்துறையின் இணையதளத்திலும் வெளியிடப்பட்டது.

இந்த கட்டணம் தொடர்பாக மாறுபட்ட கருத்து இருந்தால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் கோர்ட்டில் வழக்கு தொடரலாம். மறுபரிசீலனை செய்யக்கோரும் உரிமையும் அவர்களுக்கு உள்ளது. ஆனால் மக்களுக்கு அரசு வழங்கும் இலவசங்களைப்பற்றி கொச்சைப்படுத்தி பேசவோ, அரசு ஊழியர்களைப்பற்றி பேசவோ அவர்களுக்கு உரிமையில்லை.

அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கு அரசு தரும் கல்வி கட்டணம் பற்றி பேசவும் அவர்களுக்கு அதிகாரம் இல்லை. கட்டணக்குழுவின் கட்டணத்தை தனியார் பள்ளிகளில் நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும்.

போலி ஏ.டி.எம். கார்டு மோசடி தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணை நேர்மையான முறையில் நடக்கிறது. இந்த வி‌ஷயத்தில் காவல்துறை சுதந்திரமாக செயல்படுகிறது. காவல்துறையின் நடவடிக்கையில் நாங்கள் தலையிடுவதில்லை.

இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.


Next Story