இலந்தைகரை கிராமத்தில் பழங்கால பொருட்கள் கண்டெடுப்பு: அகழ்வாராய்ச்சி நடத்த கோரிக்கை


இலந்தைகரை கிராமத்தில் பழங்கால பொருட்கள் கண்டெடுப்பு: அகழ்வாராய்ச்சி நடத்த கோரிக்கை
x
தினத்தந்தி 14 May 2018 11:30 PM GMT (Updated: 14 May 2018 11:24 PM GMT)

காளையார்கோவில் அருகே இலந்தைகரை கிராமத்தில் பழங்கால பொருட்கள், நாணயம் உள்ளிட்டவை கிடைத்துள்ளன.

காளையார்கோவில்,

காளையார்கோவில் அருகே உள்ளது இலந்தைகரை. இந்த கிராமத்தில் வேளார் மேடு என்ற இடத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணியில் சிலர் ஈடுபட்டிருந்தனர். மரங்களை அவர்கள் வேரோடு பிடுங்கி அகற்றினர். அப்போது மரங்களை அகற்ற தோண்டப்பட்ட குழியில் பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஓடுகள், கல், பாசிகள், தங்க நாணயம், கல்லால் செய்யப்பட்ட பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட ஓடு உள்ளிட்ட பொருட்கள் கிடைத்தன. மேலும் மிருகங்களின் எலும்புகளும் தென்பட்டன. இதனையடுத்து அந்த பொருட்களை காளையார்கோவில் சமூக ஆர்வலர் ரமேஷ் சேகரித்துள்ளார். அந்த பொருட்களில் 5 கிராம் தங்க நாணயம் ஒன்று கண்டெக்கப்பட்டது. அந்த நாணயத்தில் அரபு மொழியில் எழுதப்பட்டிருந்தது.

இதுகுறித்து வருவாய்த்துறை மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு ரமேஷ் தகவல் தெரிவித்தார். பின்னர் கண்டெடுக்கப்பட்ட பொருட் களை தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அந்த பொருட்கள் அனைத்தும் சுமார் 1,000 ஆண்டுகள் முந்தையது என்று கூறினர். இதனையடுத்து கீழடி போன்று இங்கு தமிழர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இருக்கலாம் என்றும், அதுதொடர்பாக அகழ்வாராய்ச்சி நடத்த வேண்டும் என்றும் இப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அதிகாரிகளிடம் மனுவும் கொடுத்துள்ளனர்.

இலந்தைகரை போன்று காளையார்கோவில் வட்டாரத்தில் வேளாரேந்தல், பாலையேந்தல், தவளிமண்டபம், நல்லேந்தல், கிராம்புளி, மாராத்தூர் உள்ளிட்ட கிராமங்களிலும் முதுமக்கள் தாழி உள்ளிட்ட பழங்கால பொருட்கள் சமீப காலமாக கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது. 

Next Story