கும்கி யானைகள் தேர்வு எப்படி?


கும்கி யானைகள் தேர்வு எப்படி?
x
தினத்தந்தி 15 May 2018 9:46 AM GMT (Updated: 15 May 2018 9:46 AM GMT)

கும்கிக்கு, ஆண் யானைகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. நல்ல வாட்டசாட்டமான ஆண் யானைகளைத் தேர்வு செய்வார்கள்.

காடுகளுக்கு அருகில் வசிக்கும் கிராம மக்களுக்கு காட்டு யானைகள் எப்போதும் ஒரு தொந்தரவாகவே இருக்கும். வயல்களை அழிப்பதும், குடியிருப்புகளை சேதப்படுத்துவதும் யானைகளின் வாடிக்கையாக இருக்கிறது. இவற்றை விரட்ட மனிதன் பலவகை முயற்சிகளை செய்து வருகிறான். அந்த முயற்சிகள் பலவற்றில் யானைகள் காயம் அடைந்தன. மனிதர்கள் இறந்தனர். யானைக்கும், மனிதனுக்குமான இந்த போராட்டத்தை சுமூகமாக மாற்றுவதற்கு வனத்துறை ஒரு வழியைக் கண்டுபிடித்தது. அதுதான் யானையை வைத்தே யானையை விரட்டுவது.

சரி, நாம் வளர்க்கும் கோவில் யானைகளை வைத்து விரட்டலாமே என்றால், அது முடியாது. கோவில்களில் இருக்கும் யானைகள் எல்லாமே பெண் யானைகள் தான். அது மட்டுமல்ல, பிறந்ததில் இருந்து மனிதர்களை பார்த்தே வளர்வதாலும், ஒரே இடத்தில் கட்டிப்போட்டு இருப்பதாலும் பலம் குறைந்து மென்மையாகி விடுகின்றன. காட்டு யானைகளை நேரில் பார்த்த மாத்திரத்திலேயே இவை கதி கலங்கி விடுகின்றன. அதனால் அவற்றை பயன்படுத்துவது இல்லை.

இந்த பிரச்சினைக்கு வழி தேடும் போது உருவானதுதான் காட்டு யானைகளை வைத்தே காட்டு யானைகளை விரட்டுவது என்ற திட்டம். இதற்காக காடுகளில் அடிபட்டு கிடக்கும் யானைகளைக் கொண்டு வந்தார்கள். அவற்றிற்கு மருத்துவம் செய்து பழக்கப்படுத்தி, அதிலிருந்து குறிப்பிட்ட யானைகளை தேர்ந்தெடுத்தார்கள். அவற்றை கும்கி என்று அழைத்தார்கள்.

கும்கிக்கு, ஆண் யானைகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. நல்ல வாட்டசாட்டமான ஆண் யானைகளைத் தேர்வு செய்வார்கள். அவற்றுக்கு நீளமான தந்தம் இருக்கும். தந்தம் என்பது யானைக்கு தனி கம்பீரத்தை கொடுப்பது. பெரிய தந்தம் கொண்ட யானையைப் பார்த்து மற்ற யானைகள் பயம் கொள்ளும்.

இப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட கும்கி யானைகள் முழுவதுமாக குணமடைந்தபின், அவற்றுடன் பாகன்கள் நெருங்கிப் பழக தொடங்குவார்கள். ஆரம்பத்தில் பக்கத்தில் வரவிடாமல் யானை விரட்டியடிக்கும். அதையும் மீறி மெல்ல மெல்ல அருகே செல்வார்கள். முதலில் இனிப்பான கரும்புத் துண்டுகளை கொடுத்து பழக்கப்படுத்துவார்கள். காட்டில் கரும்பு கிடையாது. முதன்முதலில் இனிப்பை சுவைக்கும் யானை அந்த சுவைக்கு அடிமையாகும். தொடர்ந்து வெல்லம் கொடுப்பார்கள்.

இப்படியாக கொஞ்சம் கொஞ்சமாக கும்கியை வழிக்கு கொண்டு வந்து காட்டு யானையை துரத்தும் அளவிற்கு பழக்கப்படுத்துகிறார்கள். 

Next Story