நள்ளிரவில் துணிகரம் ஓய்வு பெற்ற கண்டக்டர் மனைவியிடம் 7½ பவுன் தங்க சங்கிலி பறிப்பு


நள்ளிரவில் துணிகரம் ஓய்வு பெற்ற கண்டக்டர் மனைவியிடம் 7½ பவுன் தங்க சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 15 May 2018 11:00 PM GMT (Updated: 15 May 2018 3:24 PM GMT)

அருமனை அருகே நள்ளிரவில் ஜன்னல் கம்பியை வளைத்து வீடு புகுந்து ஓய்வு பெற்ற கண்டக்டர் மனைவியிடம் 7½ பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

அருமனை,

அருமனை அருகே உள்ள சூட்டூர்கோணம் பகுதியை சேர்ந்தவர் ஆல்பி (வயது60), ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டர். இவரது மனைவி விஜயா (53). இவர்கள் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க ஜன்னல் கம்பிகளை வளைத்து உள்ளே புகுந்தனர். பின்னர், அவர்கள் தப்பி செல்வதற்கு வசதியாக வீட்டின் கதவுகளை திறந்து தயார் நிலையில் வைத்தனர்.

பிறகு வீட்டில் அலமாரி, மேஜை போன்றவற்றில் பணம், நகை ஏதாவது இருக்கிறதா என தேடினர். அப்போது, அவர்களது கையில் எதுவும் சிக்கவில்லை.

தொடர்ந்து படுக்கை அறைக்குள் புகுந்து அங்கு தூங்கி கொண்டிருந்த விஜயாவின் கழுத்தில் கிடந்த 7½ பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். அப்போது, திடீரென கண்விழித்த விஜயா, ‘திருடன்... திருடன்...’ என சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு தூங்கி கொண்டிருந்த ஆல்பி எழுந்தார். உடனே, மர்ம நபர்கள் ஏற்கனவே திறந்த நிலையில் வைத்திருந்த கதவு வழியாக தப்பி சென்றுவிட்டனர்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு கூடினர். அவர்கள் மர்ம நபர்களை அந்த பகுதியில் தேடினர். ஆனால்,  கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து அருமனை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிந்து இருந்த மர்ம நபர்களின் ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. இந்த சம்பவம் குறித்து, அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து நகை பறித்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story