தஞ்சை கரந்தை பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன


தஞ்சை கரந்தை பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன
x
தினத்தந்தி 15 May 2018 10:45 PM GMT (Updated: 15 May 2018 4:00 PM GMT)

தஞ்சை கரந்தை பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஆக்கிரமிப்புகளை அகற்றி நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை கரந்தை பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படுகின்றன. இந்த பகுதி வழியாகத்தான் கும்பகோணம், மயிலாடுதுறை சீர்காழி, சிதம்பரம், அரியலூர், திருவையாறு, சென்னை உள்ளிட்ட இடங்களுக்கும் பஸ்கள் சென்று வருகின்றன. மேலும் இந்த பகுதியில் பள்ளிகள், கல்லூரிகளும் உள்ளன.

இந்த சாலை மிகவும் குறுகியதாக இருப்பதாலும், சாலை ஒரங்களில் வாகனங்களை நிறுத்துவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன. ஒரே நேரத்தில் இரண்டு வாகனங்கள் எதிரே வந்து செல்வதில் சிரமம் ஏற்படும் போது பல மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் நிற்கின்றன. இதனால் இந்த வழியாக செல்பவர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.


இதனால் இந்த பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர். அதன்படி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேற்று ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பொக்லின் எந்திரம் மூலம் கரந்தை பகுதியில் உள்ள கடைகளின் முன்பு ஆக்கிரமித்து போடப்பட்டு இருந்த கொட்டகைகளை அகற்றினர். மேலும் அங்கிருந்த மண் திட்டுகளையும் சமன்படுத்தினர்.

இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது மாநகராட்சி அதிகாரிகளும் உடன் இருந்தனர். ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதையொட்டி அந்த பகுதியில் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story